கரையில் எழுந்தருளிய நம் பெருமாள்.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவையொட்டி நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான நம்மாழ்வார் மோட்ச வைபவம் இன்று (ஜன. 9) நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா கடந்த டிச. 19-ம் தேதி திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் தொடங்கியது. மறுநாள் தொடங்கிய பகல்பத்து உற்சவத்தின்போது பல்வேறு அலங்காரங்களில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
கடந்த டிச. 29-ம் தேதி நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சியளித்தார். டிச. 30-ம் தேதி அதிகாலை விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அன்று தொடங்கிய ராப்பத்து உற்சவத்தில் தினமும் பிற்பகல் மூலஸ்தானத்தில் இருந்து பல்வேறு வகையான அலங்காரங்களில் புறப்பாடு கண்டருளிய நம்பெருமாள், ஆயிரங்கால் மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீரங்கம் ராப்பத்து உற்சவத்தில் 10-வது நாளான நேற்று சந்திரபுஷ்கரணி குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவம்.
ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு கண்டருளிய நம்பெருமாள், பரமபத வாசல் கடந்து சந்திர புஷ்கரணியை சென்றடைந்தார்.
அங்கு நம்பெருமாள் சார்பில் தீர்த்தபேரர் எனப்படும் சின்ன பெருமாளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து, நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மாலை 6.30 மணிக்கு பொதுஜன சேவையுடன் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
இன்று (ஜன.9) அதிகாலை 3 மணி வரை அரையர் சேவை, திருப்பாவாடை கோஷ்டி நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு நம்மாழ்வார் மோட்ச வைபவம் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
நாளை (ஜன.10) அதிகாலை 4 மணிக்கு இயற்பா சாற்றுமுறையுடன் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.