ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சந்நிதியை வானமாமலை ஜீயர் மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சந்நிதி 24-வது பட்டம் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், சொந்தக் காரணங்களுக்காக பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சந்நிதி 24-வது பட்டம் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் நேற்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: மணவாள மாமுனிகள் மடத்தின் மீது 23-வது ஜீயர் சுவாமிகளால் சந்நியாச தீட்சை வழங்கப்பட்டு, ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் என்ற பட்டத்துடன் 2015-ம் ஆண்டு முதல் 24-வது பீடாதிபதியாகச் செயல்பட்டு வந்தேன்.
மணவாள மாமுனிகள் மடம், வானமாமலை மடம் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே, 23-வது பட்டம் ஜீயர் சுவாமிகள் மடத்தை வானமாமலை மடத்தின் வசம் ஒப்படைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்து 2024 டிசம்பரில் வழக்கைத் திரும்பப் பெற்றார். இந்நிலையில், மணவாள மாமுனிகள் சந்நிதியில் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்திய பிறகு முறைப்படி ஒப்படைப்பதாகத் தெரிவித்திருந்தேன். அதன்படி அண்மையில் கும்பாபிஷேகம் முடிவடைந்தது. இதையடுத்து, இன்று (நேற்று) மடத்தின் நிர்வாகத்தை வானமாமலை ஜீயர் மடத்தின் வசம் ஒப்படைக்கிறேன். சொந்தக் காரணங்களுக்காக மடத்தின் 24-வது பட்டத்தின்பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இவ்வாறு ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.
வானமாமலை மடத்தின் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: வானமாமலை மடத்துக்கு உட்பட்டதுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சந்நிதி. இங்கு தொடக்க காலத்தில் இருந்து வானமாமலை மடம் சார்பில் ஜீயர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். 23-வது பட்டம் ஜீயர் சுவாமிகள், 24-வது பட்டமாக ஸ்ரீ சடகோப ராமானுஜ சுவாமிகளை நியமித்தார். அவரை 24-வது பட்டமாக வானமாமலை மடம் ஏற்றுக் கொண்டது. தற்போது அவர் சொந்தக் காரணங்களுக்காக பட்டத்திலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். இதனால், வானமாமலை மடம் சார்பில் 25-வது பட்டம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் நியமிக்கப்படுவார். அதுவரை தற்காலிக நிர்வாகியாக ரெங்கராஜன் செயல்படுவார். இவ்வாறு கூறினார்.