சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர்: 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில், பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஆண்டாள் அவதரித்த சிறப்புக்குரியது.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி, பாவை நோன்பு இருந்து ரெங்கமன்னாரை மணந்தார் என்பது ஸ்தல வரலாறு.
மார்கழி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் ஆண்டாள் பாடிய திருப்பாவைப் பாடல்கள் தமிழில் பாடப்படுகின்றன. ஆண்டாள் கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
மார்கழி மாதத்தின் முதல் நாளான நாளை (டிச. 16) காலை 10 மணிக்கு ஆண்டாளுக்கு தங்க இலைகளால், திருப்பாவை பாடல்கள் நெய்யப்பட்ட 18 கஜம் திருப்பாவை பட்டு சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
தினசரி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவை கோஷ்டியும் நடைபெறும்.
மார்கழி மாதத்தில் பச்சை பரப்புதல், பகல்பத்து, ராப்பத்து உற்சவம், வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம், கூடாரவல்லி உற்சவம் என தினசரி பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.