இயேசு உயிர்த்தெழுந்த காட்சி.
நாகப்பட்டினம்: ஈஸ்டர் பண்டிகையையொட்டி, வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து 3-ம் நாள் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்திப்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நேற்று அதிகாலை சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக, பேராலயத்தின் கலையரங்கில் நேற்று முன்தினம் இரவு 11.45 முதல் பாஸ்கா திருவிழிப்பு திருப்பலி நடைபெற்றது.
மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்வுகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டன.
இயேசு உயிர்த்தெழும் காட்சியின்போது வாணவேடிக்கை நடத்தப்பட்டு, பேராலயம் வண்ண விளக்குகளால் மிளிர்ந்தது. தொடர்ந்து, திவ்ய நற்கருணை ஆராதனை நிறைவேற்றப்பட்டது.
வேளாங்கண்ணியில் நடந்த ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத் தந்தை அற்புதராஜ் உள்ளிட்டோர்.
திருச்சடங்குகளை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் பங்குத் தந்தை அற்புதராஜ் உள்ளிட்டோர் நடத்தினர். மேலும், தமிழ், மலையாளம், கொங்கணி, தெலுங்கு, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.