குமுளி: சபரிமலையில் மகரஜோதி விழா நிறைவை சிறப்பிக்கும் வழிபாடாக பாரம்பரிய, ஐதீக சம்பிரதாய சடங்குகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்றுடன் பக்தர்களுக்கான தரிசன அனுமதி முடிவடைகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரஜோதி திருவிழா கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழா நிறைவைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு பாரம்பரிய, புராதன வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக மகர ஜோதி விழா முடிந்த இரண்டாம் நாளில் இருந்து தினமும் படிபூஜை நடைபெற்று வருகிறது. 4-ம்நாள் படிபூஜை இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
மகரஜோதி காலத்தில் மட்டுமே திறக்கப்படும் ஐயப்பன் மணிமண்டப ஜீவசமாதியில் ஐயப்பனின் எழுந்தருளல் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. களம் எழுதுதல் என்று கூறப்படும் இந்நிகழ்ச்சியில் மகாசமாதி முன்பு ஐயப்பனின் பால்யகாலம் முதல் யோகநிலை வரையிலான பல்வேறு உருவங்கள் வரையப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
சாங்கிய வழிபாடாகக் கருதப்படும் ஐயப்பன் வேட்டைக்குச் செல்லும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதற்காக மாளிகைபுரத்தம்மன் கோயில் அருகே இருந்து வேட்டை ஐயப்பனின் ஊர்வலம் தொடங்கியது. 18-ம்படி முன்பு வாள், வில்லுடன் ஐயப்பனின் வீர, தீர பராக்கிரமங்கள் கிராமிய முழக்கங்களாக எழுப்பப்பட்டன. இதனைப் பாரம்பரிய குழுவினர் முன்மொழிந்து ஆமோதித்தனர். அரைமணி நேரம் நடைபெற்ற இந்த வழிபாட்டில் பந்தளம் ராஜ வம்ச பிரதிநிதி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அதேபோல் மகரஜோதி கால நெய்அபிஷேகம் நேற்று காலை 11 மணியுடன் முடிந்தது. பாரம்பரிய ஐதீகத்தின் ஒரு பகுதியாக இன்று இரவு குருதி பூஜை மாளிகைபுரத்தம்மன் கோயில் அருகே நடைபெற உள்ளது. உணவு மற்றும் நீரில் குங்குமம் கரைக்கப்பட்டு அவை வன தேவதைகளுக்கு வழங்கப்பட உள்ளன. இத்துடன் அனைத்து பாரம்பரிய சடங்குகளும் நிறைவு பெறுகின்றன.
இதைத் தொடர்ந்து இன்று இரவு 11 மணி வரையே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர். நாளை காலை பந்தள ராஜ வம்ச பிரதிநிதியின் சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு காலை 6.30 மணிக்கு நடைசாத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மகரஜோதி வழிபாடுகள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன. பின்பு, கும்பம் மாத (மாசி) வழிபாட்டுக்காக பிப்.12-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும்.