பழநி மலைக் கோயிலுக்கு இயக்கப்படும் வின்ச் ரயில்.
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வின்ச் ரயிலில் செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் ரோப் கார் (கம்பி வட ஊர்தி) மற்றும் மின் இழுவை ரயில்கள் (வின்ச்) இயக்கப்படுகின்றன. ரோப் காரில் 3 நிமிடங்களிலும், இழுவை ரயிலில் 7 நிமிடங்களிலும் மலைக்கோயிலை அடையலாம். இவற்றில் சாதாரண நாட்களில் 2 மணி நேரமும், விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழா காலங்களில் குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் வரையிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது.
திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழநி உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை தடுக்கவும், கூட்ட நெரிசலை முறைப்படுத்தவும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மற்றும் நேர ஒதுக்கீட்டு முறையை விரைவில் அறிமுகம் செய்ய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஜூலை 3-ம் தேதி முதல் பழநியில் 6 கால பூஜைக்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, நேற்று முதல் வின்ச் ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
தினமும் பிற்பகல் 1.31, 2.01, 2.31 மற்றும் 3.01 மணி என 4 பிரிவுகளாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களுக்கு விருப்பமான நாள் மற்றும் நேரத்தை தேர்வு செய்து, நபர் ஒன்றுக்கு ரூ.100 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த கட்டணம் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கும், மலைக்கோயிலில் இருந்து அடிவாரத்துக்குத் திரும்பி வருவதற்கான இருவழி கட்டணமாகும். குறிப்பிட்ட நேர ஒதுக்கீட்டில் 25 நபர்கள் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்த பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக வின்ச் ரயில் நிலையம் நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்லலாம்.
இந்த சேவை தைப்பூசம், பங்குனி உத்திரத் திருவிழா, கிருத்திகை, தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் இருக்காது. அதன்படி ஆண்டுக்கு 44 நாட்கள் முன்பதிவு வசதி இருக்காது. இதேபோல், ரோப் காரில் செல்வதற்கும் கோயிலுக்குச் சொந்தமான விடுதி அறைகளில் தங்குவதற்கும் முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.