குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர வழிபாட்டுக்காக இன்று மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி இடவம் (வைகாசி) மாதத்துக்காக இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் கருவறையை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து ஐயப்பனின் தவக்கோலம் நீக்கப்பட்டு விக்ரகம் மீது பூசப்பட்ட விபூதி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். பின்பு சிறப்பு வழிபாடுகள் எதுவுமின்றி இரவு நடை சாத்தப்படும்.
பின்பு நாளை அதிகாலை முதல் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் கூறும்போது, ‘‘15-ம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் உள்ளன. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கி கேரளா முழுவதும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. எனவே பக்தர்கள் குடை போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கோயிலுக்கு வர வேண்டும்’’ என்றனர்.