ஆன்மிகம்

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பொன்னர் சங்கர் திருவிழா: நள்ளிரவில் கறி விருந்து

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழாவில், நள்ளிரவில் உருண்டை சோறுடன் கிடாக்கறி விருந்து நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பாத சிறுகுடியில் பொன்னர்சங்கர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உருண்டைச் சோறுடன் கூடிய கறி விருந்து திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று ( திங்கள்கிழமை ) இரவு நடைபெற்றது. இதில், பக்தர்கள் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கிய 101 ஆடுகளை வெட்டி கோயிலில் திரண்டிருந்த ஆண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அவர்களே ஒன்றிணைந்து ஆடுகளை உரித்து சுத்தம் செய்து சமையல் பணியிலும் ஈடுபட்டனர். பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு பொன்னர் சங்கர் சாமிக்கு படைக்கப்பட்ட உருண்டை சாதத்தை மின் விளக்கை அணைத்த பின்னர் வானை நோக்கி எரியும் ஐதீகம் கடைபிடிக்கப்பட்டது. பின்னர் சோறு உருண்டை மற்றும் கறிக்குழம்புடன் கூடிய கறி விருந்து நடைபெற்றது.

நள்ளிரவில் தொடங்கிய திருவிழா அதிகாலையில் நிறைவடைந்தது. இதில் நத்தம், குட்டுபட்டி, பாதசிறுகுடி, குமரபட்டி, புதூர், குட்டூர், மாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT