மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் அம்மனின் உற்சவத்தை காண திரண்டிருந்த பக்தர்கள். (உள்படம்) விஸ்வரூப அலங்காரத்தில் எழுந்தருளிய அங்காளம்மன்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நேற்று நடந்தது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி பெருவிழா, மகா சிவராத்திரி நாளான நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் சக்தி கரக வழிபாடு நடைபெற்றது.
இதையடுத்து, 2-ம் நாளான நேற்று காலை கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதன்பிறகு மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. சிம்ம வாகனத்தில் விஸ்வரூப அலங்காரத்தில் மயானத்துக்கு அங்காளம்மன் புறப்பட்டார்.
வழியெங்கும் அங்காளம்மன் முன்பு பல்வேறு வேடமிட்ட பக்தர்கள் நடனமாடியபடி சென்றனர். மயானத்தை அங்காளம்மன் சென்றடைந்தும், அங்கு அவருக்கு சிறப்பு வழிபாட்டுடன் பிரம்ம கபாலத்தை அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
சிவனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷத்தை அங்காளம்மன் நீக்கியதாக புராணங்கள் கூறுகிறது. செல்லும் வழியிலும் மற்றும் மயானத்திலும் அங்காளம்மன் மீது நாணயங்கள், விளை பொருட்கள், உணவு தானியங்கள் மற்றும் சேவல்களை பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.
இதையடுத்து மயானத்தில் படைக்கப்பட்ட பொருட்களை பக்தர்கள் மீது பூசாரிகள் சூறை விட்டனர். அவற்றைப் போட்டி போட்டிக் கொண்டு பக்தர்கள் சேகரித்தனர். மயான கொள்ளையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அங்காளம்மனை வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து 5-ம் நாளான வரும் 19-ம் தேதி மாலை 3 மணியளவில் தீமிதி உற்சவமும், முக்கிய நிகழ்வான வரும் 21-ம் தேதி திருத்தேர் உற்சவமும் நடைபெற உள்ளது.
10 நாள் நடைபெறும் மாசி திருவிழாவில், தினசரி காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் அங்காளம்மன் உற்சவம் நடைபெற்று வருகிறது. வரும் 27-ம் தேதி அம்மன் வீதியுலா மற்றும் காப்பு களைதல் உற்சவத்துடன் மாசி திருவிழா நிறைவு பெற உள்ளது.
மயான கொள்ளை விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர். சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.