மாயனை மன்னு வடமதுரை மைந்தனை |
தூய பெருநீர் யமுனைத் துறைவனை ||
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை |
தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை ||
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது |
வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க ||
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் |
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் ||
(திருப்பாவை 5)
கண்ணன் பாற்கடலில் பள்ளி கொண்ட நீலவண்ணன். நிலைத்த தன்மை கொண்ட மதுராவில் தோன்றிய மாயக்காரன், கோகுலத்தில் ஆயர்குலத்தில் தோன்றிய அணிவிளக்கு. அனைத்து பெருமைகளையும் ஒருசேரக் கொண்ட யமுனை நதிக்கரையில் மாயவித்தைகள் புரிந்தவன். தனது தாய்க்கு பெருமை தேடித் தந்த தாமோதரன்.
காலையில் மார்கழி நீராடி, கண்ணனை மனதில் தியானித்து வழிபட்டால், நம்முடைய தீவினைகள் (முன்பு செய்த பாவங்கள், இனிமேல் வரக்கூடிய தீமைகள் ( அனைத்தும் தீயில் இட்ட தூசு போல் பொசுங்கி விடும். அதனால் இந்த புனிதமான, தூய்மையான பெருமாளின் புகழை என்றும் பாடுவோம் என்று தனது தோழிகளுக்கு அறிவுறுத்துகிறாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.
இறைவனின் பெருமைகளை அறிந்துகொள்வோம்!
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் |
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் ||
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் |
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் ||
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் |
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ||
ஓலம் இடினும் உணராய் உணராய்காண் |
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய் ||
(திருவெம்பாவை 5)
திருமால் வராக அவதாரம், பிரம்மதேவர் அன்ன வடிவம் எடுத்துச் சென்றும் சிவபெருமானின் உச்சியையும், பாதங்களையும் காண முடியவில்லை. அப்படிப்பட்ட பெருமை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார்.
நறுமண திரவியம் பூசிய கூந்தல், இனிய உதடுகள் என்று அனைத்திலும் அழகும், நல்ல பண்பும் நிறைந்த தோழியே..! அவரை நாம் அறிவோம் என்று கூறுகிறாயே..! அவரை யாராலும் (இவ்வுலகில், அவ்வுலகில் உள்ளவர்கள்) புரிந்து கொள்ள முடியாது. நாங்கள் அனைவரும் அவரை ‘சிவ சிவ’ என்று அழைத்து வணங்குகிறோம். ஆனால் நீ ஏன் அவரது பெருமைகளை உணராமல் இருக்கிறாய் என்று கூறி தோழியை எழுப்புகின்றனர்.