கும்பகோணம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதரை நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.| படம்: சி.எஸ்.ஆறுமுகம் |
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வரதராஜ பெருமாள் கோயிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் சந்நிதிக்கு கிழக்கில் உள்ள பாதாள அறையில் அத்தி மரத்தாலான சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுவது வழக்கம். அதன்படி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சிலை நேற்று முன்தினம் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது.
இதற்காக நேற்று அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதரை தரிசனம் செய்தனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.
வரும் 10-ம் தேதி வரை அத்திவரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தைலக் காப்பு, புஷ்ப சேவை, ஊஞ்சல் சேவை நடைபெறும்.
கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியிலும், மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தூய்மை மற்றும் சுகாதார பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சவுராஷ்டிரா தர்மபரிபாலன கமிட்டி நிர்வாகிகள் செய்துள்ளனர்.