புதுவை மணக்குள விநாயகர் கோயில்

 

படங்கள்: எம்.சாம்ராஜ்

ஆன்மிகம்

புத்தாண்டையொட்டி புதுவை மணக்குள விநாயகர் கோயிலில் திரண்ட பக்தர்கள்: 40,000 பேருக்கு லட்டு பிரசாதம்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புத்தாண்டையொட்டி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். 40 ஆயிரம் பேருக்கு லட்டு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.

ஜன.1 உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, புதுவையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து தங்க கவசம், கிரீடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கும் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு தனிநபர் அர்ச்சனைகள், விசேஷபூஜைகள் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்யும் வகையில், சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று மணக்குள விநாயகரை தரிசித்தனர்.

மணக்குள விநாயகரை தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. சுமார் 40 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இதேபோல் புதுவை காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயில், வேதபுரீஸ்வரர் கோயில், மிஷன் வீதியில் உள்ள காளத்தீஸ்வரர், ரெயில் நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர், முத்தியால்பேட்டை கற்பக விநாயகர், பொன்னு மாரியம்மன், ஏழை மாரியம்மன், ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், தென்கலை வரதராஜப் பெருமாள், முதலியார்பேட்டை வன்னியபெருமாள், பெரியகாலாப்ப்ட்டில் உள்ள பாலமுருகன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

SCROLL FOR NEXT