திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனித் தேரோட்டம் நேற்று கோலாலகமாக நடைபெற்றது. மலையை சுற்றி வந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். | படங்கள்: நா.தங்கரத்தினம் |
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவின் 13-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ என ஆயிரக்கணக்கான பக்தர்கள் முழக்கத்துடன் தேரைவடம் பிடித்து இழுத்தனர்.
முருகப் பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் காலை மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். 11-ம் நாள் பட்டாபிஷேகம், 12-ம் நாளான நேற்று முன்தினம் சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
முக்கிய விழாவான தேரோட்டத்தையொட்டி அதிகாலை 5.45 மணியளவில் உற்சவர் சந்நிதியிலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் கோயில் முன்புள்ள தேரில் எழுந்தருளினர்.
சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சி தந்த சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை.
முதலில் விநாயகர் சப்பரத் தேருக்கு தீபாராதனை நடைபெற்று, பின்னர் காவல் தெய்வமான கருப்பணசாமிக்கு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து 6.15 மணிக்கு பெரிய வைரத்தேரில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானைக்கும் தீபாராதனை முடிந்து காலை 6.15 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் தொடங்கியது.
பக்தர்கள் ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ என முழக்கம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். 3.5 கி.மீ. சுற்றளவுள்ள கிரிவலப் பாதையில் மக்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து ஆடி வந்தது.
வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு முருகனை தரிசனம் செய்தனர். கிரிவலப்பாதையில் வலம் வந்த தேர் மீண்டும் பகல் 12 மணியளவில் நிலையை அடைந்தது.
வெளி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மாநகர் காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் 14-ம் நாளான இன்று (ஏப்.6) காலை தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
கொடிமரத்துக்கு முன்புள்ள யாகசாலையில் 13 நாள் வைத்து பூஜை செய்த 32 கலசங்களிலிருந்து புனிதநீர் மூலம் சுவாமி- தெய்வானைக்கும் அபிஷேகம் நடைபெறும். பின்னர் சரவணப் பொய்கையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பின்னர் கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறும். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை ஆணையர் ரா.ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், சர்பத், குளிர் பானங்களை வழங்கப்பட்டன. தேரோடும் வீதியில் தண்ணீர் தெளித்து குளிர்வித்தனர். வழி நெடுகிலும் தன்னார்வலர்கள், தனியார் அமைப்பினர் சார்பில் அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டன.