குமுளி: சபரிமலை சந்நிதானத்தின் மாளிகைபுரம் கோயிலுக்குப் பின்னால் அன்னதான மண்டபம் உள்ளது. கடந்த 17-ம் தேதி மண்டல வழிபாடு தொடங்கியதில் இருந்து இங்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
காலை உணவாக உப்புமா, மதியம் மசாலா கலவை சாதம், இரவு கஞ்சி வழங்கப்படுகிறது. கடந்த 23-ம் தேதி இரவு வரை 7.45 லட்சம் பக்தர்கள் அன்னதான திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.
இதுகுறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி பைஜி கூறும்போது, “பக்தர்களிடம் இருந்து அன்னதானத்துக்கு ரூ.1.97 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 7 லட்சம் பேர் அன்னதானத்தில் பலனடைந்த நிலையில், நடப்பாண்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சபரிமலையில் நவீன முறையில் பராமரிக்கப்படும் மண்டபத்தில், ஒரே நேரத்தில் 800 பேர் வரை உணவருந்தலாம். மண்டல நாட்களில் காலை நேரத்தில் அதிகபட்சமாக கடந்த 23-ம் தேதி 6,434 பேரும், மதியம் 4,965 பேரும், இரவு 7,808 பேரும் உணவருந்தி உள்ளனர்” என்றார்.