கோப்புப் படம் : ஆர்.வெங்கடேஷ்
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இன்று (மார்ச் 29) ஆழித் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, பாதுகாப்பு பணிக்காக 1,500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமையிடமாகத் திகழ்கிறது. இங்குள்ள ஆழித் தேர் அலங்கரிக்கப்பட்ட நிலையில் 96 அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை கொண்ட இந்த தேரின் மொத்த எடை350 டன் ஆகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் இன்று காலை 9.05 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று இரவு அஜபா நடனத்துடன்தியாகராஜர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, இன்று காலை 5.30 மணியளவில் விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நடைபெற உள்ளது. பின்னர், ஆழித்தேரோட்டமும் தொடர்ந்து கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் சுவாமிகளின் தேரோட்டமும் நடைபெறுகிறது.
இந்த ஆழித்தேர் கீழவீதியில் புறப்பட்டு, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் மாலை 6 மணியளவில் நிலையடியை வந்து சேர்கிறது. ஆழித் தேரோட்டத்தையொட்டி, திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், எஸ்.பி. கருண்கரட் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், 4 வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக, நகராட்சி சார்பில் 4 வீதிகளிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.