சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நேற்று ஆடித்தவசு திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் கோமதி அம்பாள்.
தென்காசி: சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திரு விழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
9-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோமதி அம்பாள் நேற்று காலை தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 9.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். ரத வீதிகளில் வலம் வந்த தேர் காலை 11.15 மணிக்கு நிலையத்தை அடைந்தது.
600 போலீஸார் பாதுகாப்பு
தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா நாளை (28-ம் தேதி) நடைபெறுகிறது. நாளை மதியம் 12 மணிக்கு மேல் கோமதி அம்பாள் தங்கச்சப்பரத்தில் தெற்கு ரத வீதியில் உள்ள ஆடித்தபசு மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
மாலை 4.30 மணிக்கு மேல் சங்கரநாராயண சுவாமி தவசு காட்சிக்கு புறப்படும் நிகழ்வும், மாலை 6.05 மணிக்கு சங்கரநாராயண சுவாமி ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தவசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இரவு 11 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு 11.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி கோமதி அம்பாளுக்கு தவசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.