வைகாசி விசாகத் திருவிழா 
ஆன்மிகம்

பழநி வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: மே 22-ல் தேரோட்டம்

ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் வைகாசி விசாகத் திருவிழா இன்று (மே 16) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 22-ம் தேதி நடைபெறுகிறது.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு இன்று (மே16) காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் துணை ஆணையர் வெங்கடேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். திருவிழாவின் 10 நாட்களும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

ஆறாம் நாளான மே 21-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், விழாவின் முக்கிய நிகழ்வான மே 22-ம் தேதி காலை 11.30 மணிக்கு மேல் தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெற உள்ளது. மே 25-ம் தேதி காலையில் திருவூடல் நிகழ்ச்சி, இரவில் கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT