Published : 12 Sep 2013 08:05 PM
Last Updated : 12 Sep 2013 08:05 PM

ஆலயம் அறிவோம் - பழனி முருகன் கோயில்

முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் முன்றாவது படை வீடு ஆகும். இந்தக் கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்தத் தலத்தின் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார். உற்சவர் முத்துகுமாரசாமி. இந்த கோவிலில்தான் தமிழகத்தில் முதன்முதலாக பக்தர்கள் வேண்டுதல்கள் நிமித்தம் அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னரே தமிழகத்தின் மற்ற கோயிலில் பக்தர்கள் மத்தியில் கடன்செலுத்தம் பழக்கம் ஏற்பட்டது.

பழனி முருகன் மலைக்கோயில், தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும். பழனிக்கு ஆவினன் குடி, தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு.

கோயில் வரலாறு:

நாரதர் ஒரு நாள் அரிதாகக் கிடைத்த ஞானப்பழத்தை சிவனுக்கு சாப்பிட கொடுத்தார். அப்போது அருகில் இருந்த பார்வதி, தன்னுடைய மகன்கள் முருகன், விநாயகருக்கு பகிர்ந்து கொடுக்கு விரும்பினார். ஆனால், சிவபெருமானோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக் கூறி, பழத்தை பெற மகன்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார். உலகத்தை முதலில் யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு இந்த ஞானப்பழத்தை வழங்க முடிவு செய்தார். முருகனோ, தன்னுடைய மயில் வாகனத்தை உலகத்தை சுற்றிவர சென்றார். விநாயகரோ, பெற்றோரை உலகமாக நினைத்து அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை பரிசாக பெற்றார். அதிர்ச்சியடைந்த முருகன் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் பெற்றோரை விட்டு பிரிந்து பழனி முருகன் கோயிலில் குடிபெயர்ந்தார். அன்றில் இருந்து முருகன் தங்கியிருந்த இந்த படை வீடு, (பழம்+நீ) பழனி என அழைக்கப்படுகிறது.

முக்கிய திருவிழாக்கள்:

பழனி முருகன் கோயில், திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் விமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து இந்தக் கோயிலுக்கு வந்து செல்வதை வரமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலில் தங்கத் தேர் வழிப்பாடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

நடை திறக்கும் நேரம்:

மலைக்கோயில், பெரியநாயகி கோயில், திருவினன்குடி கோயில் ஆகிய மூன்று கோயில்களும் தினசரி காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்து இருக்கும்.

தலச் சிறப்புகள்:

குடும்பத்தில் சந்தோஷம், தொழில் செழிக்க, செல்வம் பெருக இந்த கோயிலில் அதிகளவில் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி முருகனை வேண்டிக் கொள்கின்றனர். பொதுவாக குழந்தைகள் தாயிடம் பிறந்து தந்தையிடம் அடைக்கலம் பெறுவார்கள். ஆனால், முருகனோ, தந்தையின் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்து, தாய் பார்வதியின் அரவணைப்பில் வளர்ந்தார். முருகன் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வந்து நின்ற தலம் என்பதால் பழனி மலையடிவாரத்தில் உள்ள திருஆவின்குடி தலமே, “மூன்றாம்படை வீடு” என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் வழங்கப்படும் பழனி பஞ்சாமிர்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பழனி பஞ்சாமிர்தம் பக்தர்கள் மத்தியில் விஷேச பிரசாதமாக விளங்குகிறது.

சுற்றுலா தலம்:

பழனி முருகன் முதலில், பக்தர்கள் வேண்டுதல்கள் மற்றும் தெய்வ வழிப்பாடுகள் செய்ய வந்து செல்ல ஒரு புன்னியதலமாக விளங்கியது. காலப்போக்கில், பழனி மலைக்கோயிலுக்கு தமிழகத்தின் பிற மாவட்ட சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வடமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வர துவங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள், மலைக்கோயிலை சுற்றிப் பார்க்க தமிழக அரசு ரோப்கார் (கம்பிவட ஊர்தி) வசதி செய்துள்ளது. சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பழனி மலையடிவாரத்தில் இருந்து மலை உச்சி பகுதியில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல இந்த ரோப்காரில் சென்று வருகின்றனர்.

தண்டாயுதபானி - பெயர் காரணம்:

இடும்பன் என்பவன், அகத்தியரின் உத்தரபடி சக்திகிரி, சிவகிரி என்ற இரு மலைகளை தென்பொதிகைக்கு எடுத்து சென்றான். வழியில் பாரம் தாங்காமல் பழனி மலையில் இடும்பன் இரு மலைகளையும் கீழே வைத்து விட்டான். அப்போது பழனி மலையில் இருந்த முருகன் கீழே வைத்த சக்திகிரி மலையில் ஏறி நின்றார். இடும்பன், அவரை இறக்ககும்படி எச்சரித்தான். முருகன் அவன் பேச்சை கேட்கவில்லை. ஆத்திரமடைந்த இடும்பன், முருகனை எதிர்க்க துணிந்தான். முருகன், அவனுக்கு தன்னுடைய அருட்பார்வையை செலுத்தி அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். சக்திகிரி மலையில் மீது ஏறி நின்றபோது முருகன் தன் கையில் தண்டம் வைத்திருந்ததால் “தண்டாயுதபாணி” என பெயர் பெற்றார்.

பழனி முருகன் கோயில்:

மூலவர் : தண்டாயுதபாணி, நவபாஷாண மூர்த்தி.

தல விருட்சம் : நெல்லி மரம்

தீர்த்தம் : சண்முக நதி

ஆகமம் : சிவாகமம்.

புராணப் பெயர் : திருஆவினன் குடி.

ஊர் : பழனி

மாவட்டம்: திண்டுக்கல்

மாநிலம் : தமிழ்நாடு

முகவரி : அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி 624601. திண்டுக்கல் மாவட்டம்.

தொலைபேசி: 04545-242293, 242236, 242493.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x