ஓடிடி விமர்சனம்

Natchathiram Nagargiradhu: அடக்குமுறைகளை சுட்டெரிக்கும் சூரியன் ‘ரெனே’ | திரை தேவதைகள் 22

பாரதி ஆனந்த்

நினா சிமோனை உங்களுக்குத் தெரியுமா? அவர் ஒரு கிளாசிக்கல் பியானிஸ்ட், ஜாஸ், ப்ளூஸ் பாடகர் என்று தேடுபொறிகள் சொல்லும்.

அந்தக் கலைகளில் அசாத்திய திறமை கொண்ட அவர், அதையும் தாண்டி அறியப்பட வேண்டியவர். கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே ஆரம்ப காலத்தில் அங்கீகரிக்க மறுத்தது அமெரிக்க சமூகம். ஃபிலடெல்பியா இசைப் பள்ளியில் முறையாக சேர்ந்து படிக்க இயலாமல், இரவுநேர மதுபான விடுதிகளில் சுயமாக இயற்றிப் பாடிய பாடல்களால் கவனம் ஈர்த்தார். ஒடுக்கப்பட்ட அவர் தன்னை இனவெறிக்கு எதிரான ‘சிவில் ரைட்ஸ்’ போராளியாக செதுக்கினார். அவர் பாடல்கள் உரிமை பேசின. வலியையும், அதிலிருந்து விடுதலை பெறுவதையும் முன்வைத்தன.

2022-ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் தமிழில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம், நினா சிமோனின் “Feeling Good” பாடலுடன்தான் தொடங்கும். படத்தின் நாயகி ரெனே அந்தப் பாடலின் ஆன்மாவைப் போல், விடுதலையையும், தன்னைப் புதுப்பித்தலையும் இலக்காகக் கொண்டவள்.

“நான் என்பது நானல்ல; சமூகத்தின் அடையாளம்” என்றுணர்ந்து துரத்தும் தனது சாதிய அடையாளத்தை உடைக்கும் முயற்சியில் சில்லு சில்லாக நொறுங்கி தன்னை மீண்டும் மீண்டும் ஒட்டவைத்துக் கொண்டு சமூகத்தின் அடக்குமுறைகளை சுட்டெரிக்கும் நட்சத்திரம் ஆகி நிற்பவள். ஆம், அவள் ‘சூரியன் எனும் நட்சத்திரம்!’

அடிப்படையில் ஒரு ரொமான்டிக் டிராமா ஜானராகத் தோன்றும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆழமான சோஷியல் டிராமா. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

ரெனேவின் திமிர், எக்காளச் சிரிப்பு, விண்மீன்களில் குளிக்கும் அவளின் சிறுபிள்ளைத்தன துள்ளல், மன்னிப்பு, மறுப்பு, கோபம், முதிர்ச்சி என எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பதை சமூகத்தை சாட்சியாக வைத்து அணுகுகிறது ‘நட்சத்திரம் நகர்கிறது’

படத்தின் துவக்கத்தில் எதுவுமில்லாமல் சாதித்த இளையராஜா எனக்கொரு ‘பொலிட்டிக்கல் ஸ்டேட்மென்ட்’ என்பாள் ரெனே.

சமகால தமிழ்ச் சினிமாவில் சாதி ஒழிப்பில் ரெனே ஒரு ‘பொலிட்டிக்கல் ஸ்டேட்மென்ட்’. ரெனேவை தரிசிப்போம் வாருங்கள்.

இந்தச் சமூகம் வடித்துவைத்திருக்கும் சாதி, மத, பாலின பேதங்கள், சாத்திர, சம்பிரதாய கட்டுப்பாடுகள், பெண்ணுடலின் மீது சுமத்தப்பட்ட புனித பிம்பங்கள், ஆணாதிக்க பொறுக்கித்தனங்கள் என தன்னை நோக்கிவரும் அடக்குமுறைகளின் முகம் எதுவாக இருந்தாலும் பஞ்ச் பேகை அணுகும் பாக்ஸர் போல் ஓங்கிக் குத்துபவள்தான் இந்த ரெனே. அப்படிப்பட்டவளைப் பார்ப்பவர்கள் நிச்சயமாக ஏதேனும் விமர்சனத்தை வைக்காமல் கடக்க முடியாது.

பெண்ணை ஒடுக்குவதில் விமர்சனம் ஒருபுறம் என்றால், வர்ணனையும் போற்றுதலும் மறுபுறம் சமமான தாக்கத்தை ஏற்படுத்துபவை.

‘நீ அத்தனை அழகு’ என்று வர்ணிக்கும் ஆணிடம் ‘ஐ நோ’ என்று ரெனே சொல்லும் ஷார்ப்பாக சொல்லும் பதில் கெத்து. “அழகு என்று நீ கொஞ்சினால் நான் மயங்கிட மாட்டேன்” எனும் ஸ்டேட்மென்ட்.

பெண்ணையும் அழகையும் தொடர்புப்படுத்தியே ருசிகண்ட சமூகத்துக்கு பெண்கள் இப்படித்தான் பதில் சொல்ல வேண்டும் என்ற சுய விழிப்புணர்வுப் பாடம் அது.

ஆம்! பூட்டுக்களை உடைத்தெறியும் பெண்களை விமர்சிக்கும் சமூகத்தை, அழகென்றும், தியாகத்தின் உருவென்றும் வர்ணிக்கும் சமூகத்தை ரெனேவை போல் கிஞ்சிற்றும் சட்டை செய்யாமல் கடப்பவர்கள் தான் பெண் வாழ்வின் பூரணத்துவம். ரெனே பூரணமானவள்.

ரெனேவை கொண்டு சாதியை, ஆணாதிக்கத்தை, காதலைச் சுற்றிய புனித பிம்பங்களை, மனித ஈகோக்களை இயக்குநர் பா.ரஞ்சித் அடித்து நொறுக்கி ஒரு மாஸ்டர் பீஸ் வகையறாவை விதைத்திருக்கிறார் எனலாம்.

வழக்கமான ரொமான்டிக் டிராமா போல் காதலைச் சொல்லும் காட்சியோடு அல்லாமல் காதல் முறியும் காட்சியில் ஆரம்பிக்கிறது படம். இனியனிடம் (ஜெயராம் காளிதாஸ்) நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டிருந்த ரெனே (துஷாரா விஜயன்) அவன் தலையில் தட்டால் ஓங்கி அடித்துவிட்டு பிரேக் அப் செய்வாள்.

இளையராஜா பாடலில் ஆரம்பித்த வாக்குவாதம். ‘என்ன மாறினாலும் உன் புத்தி மாறாதுல!’ என்று இனியனின் வார்த்தை தடிக்க காதல் பிரேக் - அப் ஆகும்.

இந்தச் சமூகத்தின் பொது புத்தியில் அப்படித்தான் காலங்காலமாக ஒரு டிஎன்ஏ செட் செய்யப்படுகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியென்றும், அவர்களின் புத்தி இதுதான் என்றும். இந்தப் பிரபஞ்சத்தில், பரிணாம வளர்ச்சியில் மிகக் கடைசியாக உருவான மேம்பட்ட உயிரினமாக மனிதனைக் கருதலாம். அவ்வளவுதான் அவனது அந்தஸ்து. ஆனால், அதில் என்னென்னவோ பிரிவினைகளை, அது சார்ந்த வன்மங்களை மனிதன் உருவாக்கியிருக்கிறான்!

“மனிதனைப் பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன்” என்று எழுத்தாளர் ஜி.நாகராஜன் என்றோ சொன்னது சட்டென நினைவலையில் வந்து செல்கிறது.

படம் அப்படியே புதுச்சேரிக்கு நகரும். அங்கே சுபேர் நடத்தும் ஒரு நாடக சபாவுக்கு வந்துசேர்வார்கள் ரெனே, இனியன், சேகர், மேட்லின், டயானா, அர்ஜுன் (கலையரசன்) இன்னும் பலர். அது ஒரு மாடர்ன் ஸ்கூல் ஆஃப் டிராமா. நாடகத்தின் சடங்குகளை உடைக்கும் நாடக சபா. அதில் அர்ஜுன் தான் புதியவன். அங்கு நிலவும் ஜனநாயகம், சுதந்திரம், பாலின சமத்துவம், சக மனிதன் மீதான மரியாதை அர்ஜுன் தன் வாழ்வில் பார்த்திராத ஒன்று. அவற்றுக்கெல்லாம் பழக்கப்படாத ஒரு ‘கச்சா’ மனிதன் அவன்.

அங்கே கூடியவர்களின் இலக்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றுவது. நாடகத்தின் கரு என்னவென்ற ஆலோசனை நடக்கும். அது அத்தனை ஆர்கானிக்காக இருக்கும். காதலைத் தான் நாடகமாக்கப் போகிறோம் என்று முடிவு செய்வார்கள்.

‘காதல் என்றால் என்ன?’ என்ற கேள்வியைச் சுற்றி நடக்கும் உரையாடல்கள் சுவாரஸ்யமானது. காதல் உலகளாவியது என்ற ஒன்று மட்டும்தான் அந்த உரையாடலில் உண்மை. மற்றவை எல்லாமே காதலை எப்படிப் பார்க்க சமூகம் பழக்கப்பட்டிருக்கிறது என்பது.

அங்கே ரெனே பேசுவது ஆழமானது. ‘காதல் என்பது அரசியல்’ என்பாள் ரெனே. அப்படியே உரையாடல் வாக்குவாதமாக மாற, மனிதனைத் தவிர இந்த உலகத்தின் அத்தனை உயிரினங்களுக்குள்ளும் காதல் இயல்பானதாக நிகழ்கிறது. ஆனால் மனிதன் மட்டும் தான் சாதி, மதம், வர்க்கம், இனம், பால் என ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் காதலிப்பதே இயல்பானது என்று கட்டமைத்திருக்கிறான். அதனால் தான் சாதிவிட்டு சாதி அரும்பும் காதல்கள் நாடகக் காதல்களாகப் பார்க்கப்படுகின்றன. காதலைப் பற்றி நாடகம் இயற்றும் நாம் நாடகக் காதலை நாடகமாக்குவோம் என்று இறுதி செய்வார்கள்.

‘நாடகக் காதல்’ என்றொரு பிராண்டை தோதாக உருவாக்கி அவர்கள் சாதியில் பிறக்காததாலேயே துச்சமென நினைத்து ரயில் தண்டவாளத்திலும், சாலையிலும் உயிர்களைக் கொன்று வீசுவோருக்கும், சொந்தப் பிள்ளைகளையே காதில் விஷம் ஊற்றியும், கிணற்றில் வீசியும் கொன்று குவிக்கும் சமூகத்துக்கும் நீ அத்தனை ஆணவப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று சம்பட்டி அடிக்கிறது இப்படம். அதுவும் பிரச்சார நெடியில்லாமல் மொத்தப் படமுமே ஓர் ஆழமான பொலிட்டிக்கல் டிஸ்கோர்ஸ் போல் நகர்வதே சிறப்பு. அதை நங்கூரமாகத் தாங்குகிறாள் ரெனே.

ரெனே - இனியன் - அர்ஜுன் - இவர்களின் காதலையும், நாடகத்துக்காக அவர்கள் தேர்ந்தெடுத்த ‘நாடகக் காதல்’ கரு கதைக்குள்ளேயே கோர்த்த விதம் அசாத்தியமானது.

“யார்டீ நீ?” என்று ரெனேவை வியந்து, கவிதைபாடி, கசிந்துருகி காதலிக்கிறான் இனியன். அவனை விலக்கிவைக்க முயற்சித்தும் அவனிடம் காதலில் விழுகிறாள் ரெனே. புதுச்சேரி கடற்கரையில் நடக்கும் உரையாடலில், காதல் உருவாக எது காரணம் என்பதற்கு ‘புறத்தோற்ற ஈர்ப்பு தான் பிரதானம்’ என்று யஷ்வந்த் சொல்வதுதான் அவர்களுக்குள் நிகழ்ந்திருக்கும்.

காமம்தான் காதல் என்பதை இன்னும் மனிதர்கள் எத்தனை காலம் மறைப்பார்கள் என்று தெரியவில்லை!

ரெனே நீ வேண்டாம் இனியா என்றும், ரெனேவின் விடுதி வாசலுக்கு இனியன் வந்து நிற்கும் போதும் இருவரும் உள்ளே பற்றி எரியும் காமத்தை சுமந்தவர்களாகவே காட்சியளிப்பார்கள்.

அந்தக் காட்சியில், இனியனின் கரங்கள் பற்றி மாடியில் உள்ள அறைக்கு ரெனே அவனை அழைத்துச் செல்லும்போது வெள்ளமென சூரிய ஒளி அவர்கள் மீது பாயும்.

ரெனே இந்த பெரும்பான்மைச் சமூகத்தை, சாதி, மத, வர்க்க, பாலின பேதங்களை சுமந்து திரிபவர்களை வெளிச்சத்துக்கு கூட்டிச் செல்லும் நட்சத்திரம். அவள் ஒளியாகவேத் தான் இருக்கிறாள்.

ஆனால், அவர்கள் காதலுக்குள் இனியனின் ஆணாதிக்க, சாதிய சல்லித்தனங்கள் முகமூடியை தாண்டி முளைக்கிறது. அந்த துரத்தலோடு அவன் கேட்கும் கேள்விதான் ரெனேவின் மன்னிப்பு வீச்சுக்கு அப்பால் அவனை நிறுத்துகிறது.

பிளாஷ்பேக்குகளை பார்த்துவிட்டு மீண்டும் புதுச்சேரிக்கு வந்தால் அர்ஜுன் - ரெனே அத்தியாயத்தில் நுழையலாம்.

ஆரம்பத்தில் இருந்தே அர்ஜுனுக்கு ரெனே பிரமிப்பூட்டுகிறாள். அவளது நடை, உடை, அவள் மனிதர்களை அணுகும்விதம், ஆண்களுடன் பழகும் முறை, அவளுடைய சிரிப்பு, குறிப்பாக அவளது புத்திக் கூர்மை, நடிப்புத் திறன் என எல்லாமே அர்ஜுனை திகைக்க வைக்கிறது. அப்படியான பெண்களை அடங்காப்பிடாரிகளாகவே பார்க்கும்படி வளர்க்கப்பட்டவன் அர்ஜுன். அப்படியானவள் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியவள் என்று நம்பவைக்கப்பட்டவன் அர்ஜுன்.

ஆனால், ரெனே என்ன மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று தன்னை ஒரு சமூக அடையாளமாக செதுக்கி வைத்திருக்கிறாளோ, அந்த மாற்றத்தை அர்ஜுனிடம் நிகழ்த்துகிறாள்.

அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட பின்னர் ஒட்டுமொத்த நாடகக் குழுவாலும் புறக்கணிக்கப்பட்டு வெளியேறும்படி சொல்லும்போது, அவன் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்கிறான். ரெனேவிடமும் மன்னிப்பு கேட்கிறான். அவன் கண்களில் வழியும் கண்ணீரில் ஆண் திமிர் கரைவதை உணர்கிறாள் ரெனே.

“அர்ஜுன் இங்கிருந்து செல்லக்கூடாது. அவன் இங்கே அரசியல்மயமாகவில்லை என்றால். எங்கேயும் முடியாது,” என்கிறாள்.

தனக்கு வழங்காத மன்னிப்பை அர்ஜுனுக்கு ரெனே வழங்குவது இனியனை குழப்புகிறது.

இனியன்களுக்குத் தெரிவதில்லை பெண்ணின் மன்னிப்பு ஆண் திமிரை உதிர்க்கும்போதுதான் அவர்களுக்குக் கிடைக்குமென்று.

நான் மன்னிப்புக்கு தகுதியானவன். அதை நீ வழங்கு என்ற கேட்ட இனியனுக்கு மறுத்த ரெனே, என்னை இங்குள்ள ஒவ்வொருவரும் மன்னித்துவிடுங்கள்; நீயும் ரெனே என்று கேட்ட அர்ஜுனுக்கு வழங்குகிறாள். ஆணாதிக்கம்தான் சாதிக்கு ஊட்டச்சத்து டானிக். அதனால்தான் இனியனை அவள் மன்னிக்கவில்லை. ரெனேவுக்கு அவளது இலக்கு எப்போதுமே தெளிவாகத் தெரிகிறது.

அந்த மன்னிப்புக்குப் பின்னர் ரெனேவின் சிரிப்புகள் அர்ஜுனுக்கு கோணல்களாகத் தெரியவில்லை. ரெனேவின் நன்மதிப்பை, நம்பிக்கையை சம்பாதித்தப் பின்னர் ஒருநாள் அவளிடம் இனியன் போல் யார் நீ என்று கேட்கிறான். இனியன் கேட்டது காமத்தின் சூட்டில், அர்ஜுன் கேட்டது ரெனே ஏன் எரியும் சூரியனாக இருக்கிறாள் என்ற பின்னணியைப் புரிந்து கொள்வதற்கு.

ரெனே சொல்வாள், “நான் சில்லு சில்லாக நொறுங்கி என்னை மீண்டும் மீண்டும் ஒட்டவைத்துக் கொண்ட கண்ணாடி.” என்று. அவள் ஊர் என்றும் சேரி என்று பிரிந்த சமூகத்தில் சாதியால் துரத்தப்பட்டதை விவரிக்கும் காட்சிகளில், “நீ அஞ்சிலே, பிஞ்சிலே கண்ட காயம்; சொல்லவே இல்லையே இங்கே யாரும்” என்ற பாடல் வரிகளை என் கண்முன் நிறுத்தி கலங்கச் செய்தது. மாட்டிறைச்சி உணவால், கல்லூரியில் கிடைத்த ஸ்காலர்ஷிப்பால் கூட தனக்கு நேர்ந்த அவலத்தை கேட்கக் கேட்க அர்ஜுன் அதை நிகழ்த்திய கூட்டத்திலிருந்து முளைத்தவன் என்பதால் குற்ற உணர்வில் நிற்பான்.

சாதியை ஒழிப்பதில் சாதியால் ஒடுக்கப்பட்டோரின் குரல், இத்தனையையும் செய்தவர்கள் பக்கத்திலிருந்தா நாம் வந்தோம் என்ற சுடும் உண்மையை உணர்ந்த சுயசாதி மறுப்பாளர்களின் குரல் என இரண்டுமே சேர வேண்டும். இன்னும் சிலர் இருக்கிறார்கள் கன்வர்டட் சுயசாதி மறுப்பாளர்கள். இவர்களை அடையாளம் கண்டு விலக்கி வைப்பது சாதி ஒழிப்புப் பணியில் களையெடுத்தல். அவர்கள்தான் சாதி ஒழிப்பை சுயலாபத்துக்கான அரசியலாக்குபவர்கள்.

ரெனே தன்னை ஒடுக்கியவர்களை மீட்கப் புறப்பட்டவள். அவள் கொண்ட தீ உக்கிரமானது. அது அர்ஜுனை வெளிச்சத்துக்கு கொண்டுவரும்.

முன்பு இனியனால் ஈர்க்கப்பட்டு அவனை கைப்பற்றி அழைத்துச் செல்லும்போது பாய்ந்த ஒளி, அர்ஜுனை வா சாப்பிடப் போகலாம் என்று தன் பின்னால் வரும்போது புத்தர் படம் கொண்ட வாயிற்கதவு திறக்கும்போதும் பாயும்.

பாயும் ஒளி ரெனே. நாட்டுப் பூனைகள், பெரும் பூனைகளாக தங்களை நம்பிக் கொண்டிருக்கும் பரம்பரைத் தோன்றல்களும், இன்னும் பல பேதங்களையும் வகுக்கும் ஆறு அறிவு கொண்ட விலங்காகப் பிறந்ததாலேயே வகுத்து வஞ்சிக்கும் மனிதர்களும் பின்பற்ற வேண்டிய ஒளி.

ரெனேவின் இலக்கு ஒளியாய் இருப்பது. ரெனேவின் இலக்கு சூரியனாய் பிரகாசித்து தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னொளியை உள்வாங்கி பிரகாசிக்கச் செய்வது. அதன் குறுக்கே காதல் வந்தாலும், காமம் வந்தாலும், இல்லை ‘காட்டுப் பூனை நாட்டுப் பூனை’ நாடகத்தை அரங்கேற்ற விடாமல் வன்முறைகள் தடங்கல்களாக வந்தாலும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வாள்.

இனியனுடன் ஏன் பேட்ச் அப் செய்யக் கூடாது என்று அவனை நோக்கிச் செல்லும்போது அவன் வேறு ஒருத்தி முத்தத்தை ஊட்டிக் கொண்டிருப்பான். சலனமே இல்லாமல் கீழே இறங்கிவந்து பார்ட்டியில் கலந்து கொண்டு ஆடுவாள் ரெனே. அதேபோல் அர்ஜுன் கட்டாய திருமணத்தில் இருந்து தப்பிவந்து “எனக்கு கல்யாணம் நடந்திருந்தாள் என்ன செய்திருப்பாய்?” என்று கேட்கும்போது “சத்தமாக சிரித்திருப்பேன்” என்பாள்.

ரெனே எதையும் கடந்து செல்லக் கூடியவள். பெண்கள் அவளைப்போலத் தான் உறுதியோடு இருக்க வேண்டும்.

சாதி மட்டுமல்ல பெண்ணை ஒடுக்க இங்கே பல கொடுமைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் நகைத்து நகர்த்தினால்தான் உறுதியான கண்ணாடியாக முடியும்.

“இளையராஜாவை விமர்சனங்கள் இல்லாமல் எல்லோரும் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். வேறு வழியே இல்லை”. “சாதி ஒருநாள் ஒழிந்தே தீரும். வேறு வழியே இல்லை.” என்று ரெனே கூறுவது உண்மையின் உச்சம்.

கடைசிக் காட்சியில் ரெனே கடற்கரையில் அமர்ந்தபடி எல்லோருக்கும் நகரும் நட்சத்திரத்தைக் காட்டுவாள். காயங்கள் தன்னை பட்டை தீட்டியதுபோல், உங்களையும் கூர்மையாக்கும் என்பதற்கான அறைகூவல் அது. அவள் நகர்ந்து செல்லும் நட்சத்திரம் மட்டுமல்ல, நடுவில் நின்று பிரகாசிக்கும் தகிக்கும் சூரியனும்தான்.

திரை தேவதைகள் வாசகர் ஒருவர், “நீங்கள் சமகாலப் படங்களை மட்டும் பேசுகிறீர்கள்! ஏன் 80, 90-களில் வந்த படங்களை மறுகூறக் கூடாது?!” என்று வினவி ஒரு பரிந்துரைப் பட்டியலும் அனுப்பியிருந்தார். அதில் ‘அவள் அப்படித்தான்’ மஞ்சு இருந்தாள்.

அந்த வாசகர் மட்டுமல்ல, உங்களில் யார் பா.ரஞ்சித்தின் ரெனேவை தரிசித்தாலும் அவளில் ருத்ரய்யாவின் மஞ்சுவையும் தரிசிக்க முடியும். அவர்களின் எதிர்ப்பிலக்கு வேறாக இருக்கலாம், அவர்களில் உள்ளிருந்து புறப்பட்ட தீ ஒன்றுதான்.

| தேவதைகள் இன்னும் வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

SCROLL FOR NEXT