“One is not born, but rather becomes, a woman.” - “பெண்கள் பிறப்பதில்லை; அவர்கள் பெண்களாக ஆக்கப்படுகிறார்கள்” - இது 1949-ல் வெளியான ‘தி செகண்ட் செக்ஸ்’ (The Second Sex) பெண்ணிய நூலின் தொடக்க வரி. பெண்ணை சமூகம் எப்படி பெண்மையுள்ளவளாக கட்டமைக்கிறது என்பதைத்தான் பிரெஞ்சு தத்துவஞானி சிமோன் டிபோவர் இப்படிச் சொல்கிறார்.
2026-ல் வெளியான ‘மா பெஹன்’ ‘(Maa Behen) இந்திப் படமும், ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று இந்தச் சமூகம் எதிர்பார்க்கிறது என்பதையும், அவள் அந்த எதிர்பார்ப்பில் இருந்து விலகினால் அவளை எப்படியெல்லாம் சித்தரிக்கும் என்பதையும், சமூகம் சுமத்திய பெண்மை எனும் சுமையை எப்படிச் சில பெண்கள் சுமையென்றே தெரியாமல் சுமக்கும் அறிவிலிகளாக இருக்கிறார்கள் என்பதையும் பேசுகிறது. டார்க் காமெடி ஜானர் படமான ‘மா பெஹன்’-ஐ தமிழில் நெட்ஃப்ளிக்ஸில் நீங்கள் காணலாம்.
திருமணம் செய்யாமலோ, விவாகரத்து ஆகியோ, இணையரை இழந்தோ தனித்து வாழ நேரும் பெண்களைச் சுற்றி எப்போதும் கதைகள் இருக்கும். அதுவும் ஒருவேளை அவள் தோற்றத்தில் எடுப்பாகவும், பொருளாதார சுதந்திரம் பெற்றவளாகவும் இருந்துவிட்டால் போதும், அவளைச் சுற்றி ஆயிரமாயிரம் கட்டுக் கதைகள் இருக்கும்.
சிங்கிள் உமனின் வீட்டு அழைப்பு மணி-க்கு அக்கம் பக்கத்து வீடுகள்தான் முதலில் தலையை வெளியே நீட்டும். இப்படியாக சொந்தக் குடும்பம், தெரு, அலுவலகம் வரை அவளை ‘அவல்’ போல் அரைத்துச் சுவைப்பதில் சமூகத்துக்கு அத்தனை கொண்டாட்டம்.
‘மா பெஹன்’ படத்தில் தாய் ரேகா (மாதுரி தீட்சித்), மூத்த மகள் ஜெயா (த்ருப்தி டிம்ரி), இளைய மகள் சுஷ்மா (தரணா துர்கா) சகிதமாக பெண்களை ‘அவலாக்கி’ சுவைக்கும் சமூகத்தைப் பார்த்து பரிகாசம் செய்திருக்கிறார்கள்.
படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ‘ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ்’. உடனே, மாதுரி தீட்சித் இருப்பதால், ‘Choli Ke Peeche Kya Hai’ பாடல் ரீமிக்ஸ் வெர்ஷன் படத்தில் இருக்குமோ என்றெல்லாம் யாரேனும் மலினமாக எதிர்பார்த்தால் அந்த ரவிக்கை உங்களைப் பரிகாசம் செய்யும் என எச்சரிக்கிறோம்.
ரேகா தன் வயதுக்கு மீறிய இளமைத் தோற்றத்தோடு மிளிர்கிறார். ஒரு ஒயின் ஷாப்பில் வேலை செய்துகொண்டு தனித்து வாழ்கிறாள். அவளுடைய மூத்த மகள் ஜெயா சமூகத்தில் தனக்கொரு மரியாதை வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்துகொண்டு ரொட்டி சுட்டுக் கொண்டிருக்கிறாள். 2-வது மகள் சுஷ்மா ஒரு கன்டென்ட் க்ரியேட்டர் ஆகும் கனவில் ஏதையெதையோ ரீல்ஸாக எடுத்துத் தள்ளுகிறாள்.
இந்நிலையில், ஒருநாள் இரவில் ரேகா வீட்டுக்கு வரும் எதிர்வீட்டு குப்தா அங்கே ரத்த வெள்ளத்தில் மூர்ச்சையாகி விடுகிறான். அதைச் சமாளிக்க மகள்களை வீட்டுக்கு வரவழைக்கிறாள் ரேகா. அடுத்தடுத்து என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. அப்படியென்றால் இது ஒரு காமெடி க்ரைம் டிராமா என்று நீங்கள் புரிந்துகொண்டால். அதுவும் சரிதான்.
ஆதர்ஷ் காலனியில் வசிக்கிறாள் ரேகா. இதுதான் ஒரு பெண்ணுக்கான ஆதர்சமான வாழ்க்கை என்று வகுக்கும் ஒட்டுமொத்த ஆண் சமூகத்தையும் உருவகப்படுத்துவதுபோல் காலனிக்கு இந்தப் பெயரை இயக்குநர் வைத்தாரோ என்னவோ! அங்கே இருப்பவர்கள் எல்லோருமே மாரல் போலீஸ்தான், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியைத் தவிர!
காலனியின் பெயர் மட்டுமல்ல ‘மா பெஹன்’ என்ற படத்தின் பெயரும் கூட ஒரு குறியீடுதான். வடக்கே இது ஒருவிதமான வசைச் சொல், இங்கே தாய், சகோதரியை பழித்துப் பேசப் பயன்படுத்தும் சொல் போல. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் இந்தப் பெயரை இயக்குநர் சுரேஷ் த்ரிவேணி.
படத்தில் ரேகா, ஜெயா, சுஷ்மா, ஹேமா போன்ற பெயர்களும் 80-களில் மிகவும் பிரபலமான நிர்மா பிராண்ட் வாஷிங் பவுடர் விளம்பரத்தில் வரும் பெயர்கள். சமூகக் கறையை சுத்தம் செய்வதுபோல் இவர்களின் செயல்கள் இருப்பதால் அந்தப் பெயரை இயக்குநர் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
பெயருக்குப் பின்னால் இத்தனை சூட்சமங்களோடு பெண்களைப் பார்த்து சிரிக்கும் சமூகத்தை பகடி செய்திருக்கிறார்.
நம் பிரதான நாயகி ரேகாவுக்கு வருவோம். சிக்கென பொருந்தும் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ், உடலை ஒட்டிக்கொள்ளும் துணியாலான சேலைகள், அடர்த்தியாக பூசப்பட்ட லிப்ஸ்டிக், முகத்துக்கு பொருத்தமான இன்னும் பிற ஒப்பனை, சிகை அலங்காரம் என்று தன்னை பாங்காக வைத்திருக்கிறாள் ரேகா. அவளின் உடல் எடை கூட நகைக்கடையின் எடைபோடும் இயந்திரத்தின் துல்லியத்தோடு உயரத்துக்கு ஏற்ப இருக்கிறது.
சமூக முன்முடிவுச் சங்கிலியை தன்னளவில் உடைத்த மத்திய வயது பெண்களுக்கு ரேகாவைப் பார்க்கும்போது அட இப்படி சிக்குன்னு இருக்க வேண்டும் என்ற ஆசை வரும். ஆனால் ஏனோ ‘ஆதர்ஷ்’ காலனி ஆண்களுக்கும், அவர்களின் ஆதர்ஷ மனைவிகளுக்கும் மட்டும் அவள் சூனியக்காரியாகத் தெரிகிறாள்.
ரேகா
ரேகாவின் வீட்டுச் சுற்றுச் சுவர் எல்லாம் கேடுகெட்ட வார்த்தைகளால் நிரப்பப்படுவதும், அதை அவள் அழிப்பதும் அவளுக்கு வீடு திரும்புகையில் கதவைத் திறப்பதுபோன்று அனிச்சை செயல்.
ரேகா அந்தக் காலனிக்கு எப்படி வந்தாள். அவளுடைய கணவன், மாமியார், ஜெயா பிறந்தது, கணவன் இறந்தது, அதற்குப் பின்னால் அவள் வேறொருவருடன் வாழ்ந்து கர்ப்பமானது, சுஷ்மா பிறந்தது... அந்த வீடு மட்டுமே சொத்தாக இருக்க, வாழ்தலுக்கு அவள் செய்த நைட்டி பிசினஸ், சைபர் கஃபே பிசினஸ், டப்பாவாலா பிசினஸ் எல்லாமுமே “குற்றம் நடந்தது என்ன?” டிவி ஷோ பாணியில் ஒரு ரிப்போர்ட்டர் சொல்வதுபோல் நமக்குக் காண்பிக்கப்படுகிறது. அவரை சமூகத்தின் ஒட்டுமொத்த முகமாக உருவகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
பெண்ணுக்கான இலக்கணங்கள் அவள் வயதுக்கும் பொறுப்புக்கும் ஏற்ப மாறும். திருமணத்துக்கு முன் அவளுக்கு ‘ஒழுக்கம்’ பிரதானம், திருமணத்துக்குப் பின் அவள் குடும்ப கவுரவத்தின் அடையாளம், பிரசவித்த பின் தாயெனும் தியாகச் செம்மல் அவள், அட வயதாகிவிட்டாலும் கூட ‘ஒழுக்கசீலி’ தாய்க்கிழவியாக இருக்க வேண்டும். இவற்றை மீறினால் சூனியக்காரி என்ற பட்டம் வழங்கப்படும்.
இந்தக் கட்டுப்பெட்டிக்குள் ஆதர்ஷ் காலனி ரேகா ஒரு சூனியக்காரி. அவள் மீதான ஆண்களின் ‘பார்வை’யை நிருபர் ரேகாவை பற்றித் தரும் செய்திகள் மூலம் நமக்கு திரைக்கதை மிகவும் லாவகமாக, அதேவேளையில் அழுத்தமாகக் கடத்துகிறது.
ஆதர்ஷ் காலனிவாசிகள் ரேகாவை அவள் மகள்களைப் பற்றி புறணி பேசுகையில் அவர்கள் கைகளில் ஒரு செய்தித்தாள் இருப்பதுபோல் காட்டப்படும். அந்த நியூஸ்பேப்பர் செய்திகளுக்கும் ஒரு கெட்டவார்த்தையை தான் இயக்குநர் பெயராக வைத்திருப்பார்.
25 வயதில் கணவனை இழந்த ரேகாவுக்கு வாழ்க்கைத் துணை தேவைப்பட்டது.
வாழ்க்கைத் துணையோ, காமமோ ஓர் ஆணுக்கு தேவைப்பட்டால் அது ‘இயல்பு’ என்றும், பெண்ணுக்குத் தேவைப்பட்டால் அதை ‘அலைச்சல்’ என்றும் வகுத்திருக்கும் சமூகம்தானே இது!
ரேகாவுக்கு உண்மையில் அவளுடன் வாழ, அவள் மகள்களை பார்த்துக் கொள்ளவே வாழ்க்கைத் துணை தேவைப்பட்டது. ஒருவிதத்தில் குடும்பம் என்ற அமைப்பு மீது அவளுக்கு மோகத்தை ஏற்படுத்தியிருந்தது சமூகம்.
தனித்து வாழும் பெண்களின் போராட்டத்தைப் பற்றி எழுதினால், அந்த வலியை முழுமையாகச் சொல்ல ‘எழுத்துப் பற்றாக்குறை’ ஏற்படும்.
“வாழ்க்கைக் கடலை நான் நீந்திவிடுவேன். ஒரு சிறு துடுப்பு மட்டுமேபோதும்” என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. பெரும்பாலும் அது பொருளாதார ரீதியாக அல்லாமல் தார்மிக ஆதரவாகவே இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் பாசாங்குத்தனம்தான் அவர்களுக்கு தரப்படுகிறது. சுஷ்மாவின் தந்தை சிங்கிள் உமன்களை குறிவைக்கும் அப்படியான பாசாங்குத்தனத்தின் உருவகம்.
பணத்துக்காக சுஷ்மாவின் கழுத்தில் கத்தியை வைக்கும் தருணம், தனக்குத் தேவை ஆண் துணை அல்ல, தன்னை நேசிப்பது, தன்னைத்தானே கனிவோடு அணுகுவது என்பது புரியும். ஆஸ்கர் ஒயில்டு சொல்வதுபோல் தன்னை நேசித்தல் என்பது வாழ்நாளைக்குமான காதல்.
ரேகாவின் மூத்த மகள் ஜெயாவை பற்றியும் முக்கியமாகப் பேசியே ஆக வேண்டும். தாயைச் சுற்றி எழுப்பப்பட்ட விமர்சனங்களாலேயே, ஒரு ‘கவுரவமான’ குடும்பத்தில் வாழ்க்கைப்படுவதே தனக்கு சமூகத்தின் மரியாதையை ஈட்டித் தரும் என்று நம்பியவள். ஆனால், அவள் திருமணம் நடந்த முறையே சமூக விமர்சனத்துக்கு உள்ளாகி நீங்கா ரணமாகிவிடுகிறது.
ஜெயா
ஜெயாவின் தோழியை பணக்கார குடும்பத்து இளைஞன் மானஸ் பெண் பார்க்க வர, அங்கே பெர்ஃபெக்ட் வட்ட வடிவ சப்பாத்தியை சுட்ட ஜெயாவை அவனுக்குப் பிடித்துவிடுகிறது. அதுவும் சமையலறையில் நிற்கும் அவளைப் பின்னால் இருந்து கட்டியணைத்து தனதாக்கிக் கொள்கிறான். ஆனால் காலனியோ அவனை ஜெயா வளைத்துப்போட்டதாகவே நம்புகிறது.
அந்த கவுவரமான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ஜெயா, அங்குள்ள 5 ஆண்களுக்கு 6 ஆண்டுகளில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 255 சப்பாத்திகளை சுட்டதைத் தவிர எதுவும் செய்யவில்லை.
இருந்தாலும், குடும்பத்துடன் அனுசரித்து வாழ்தலே தனக்கு தாய் ரேகாவுக்குக் கிடைக்காத அத்தனை மரியாதையும் காலடிக்கு கொண்டு வருமென்று அனுசரித்தே செல்கிறாள் ஜெயா. அந்த ப்ராசஸில் அவள் தனது சுயமரியாதையை துளி மிச்சமின்றி இழந்தே நிற்கிறாள்.
ஜெயா வாழும் வீட்டில் சப்பாத்தி போல் ஒரு கடிகாரம் இருக்கும். உண்மையில் ஜெயா அந்த வீட்டில் அப்படித்தான் ஆகியிருப்பாள். இந்திய மருமகள்கள் பலரும் படித்திருந்தாலும் பெர்ஃபெக்ட் ரவுண்ட் சப்பாத்தி, தோசையாகத் தான் இருக்கிறார்கள்.
எல்லா குற்றத்தையும் செய்பவர்கள் ஆண்களாகவே இருந்தாலும், அதை மவுனம் மூலம் அனுமதித்து தங்களைத் தாங்களே குறுக்கிக் கொள்ளும் பெண்களையும் இயக்குநர் விட்டுவைக்கவில்லை. அவர்களின் அறிவிலித்தனத்தை எல்லாம் அம்பலப்படுத்தி இருக்கிறார்.
சுஷ்மா
ரேகா, ஜெயாவை போல சுஷ்மாவும் சமூகத்தின் முன் தீர்மானங்களால் பாதிக்கப்பட்டவளாகவே இருக்கிறாள். சுஷ்மாவாக நடித்திருக்கும் துர்கா தரனா ஒரு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர், கன்டென்ட் க்ரியேட்டராக விரும்புகிறாள்.
அவளும் அவளது ஆண் நண்பனும் மழையில் முத்தம் கொடுத்துக் கொள்ளும் காட்சியை அவள் பதிவேற்ற அது வைரலாகி அவளுக்கு ‘ஒழுக்கமற்றவள்’, ‘வெட்கமற்றவள்’, ‘மானங்கெட்டவள்’ போன்ற முன்னொட்டுகளைப் பெற்றுத் தருகிறது. ஆதர்ஷ் காலனியின் கண்டிப்பால் அவளை அக்கா வீட்டுக்கு அனுப்பிவைக்கிறாள் ஜெயா. ஆனால், அவளுடன் முத்தத்தைப் பகிர்ந்து கொண்ட இளைஞன் அங்கேயாதான் இருக்கிறான். அவனை சூனியக்காரியால் பாதிக்கப்பட்டவனாகவே ஆதர்ஷ் காலனி பரிதாபத்தோடு அணுகுகிறது. அதுபோலத்தான் அக்கா கணவருடன் சுஷ்மா பதிவு செய்யும் வீடியோக்களும் அவளுக்கு மட்டுமே கேடுகெட்டவள் போன்ற வசைபாடுகளைப் பெற்றுத் தருகிறது.
சமூகம் எப்போதும் தனிமனித ஒழுக்கத்தை பாலினம் சாராது பொதுவில் வைப்பதில்லை. இரட்டை நிலைப்பாட்டுடன்தான் அணுகுகிறது.
மச்சினிச்சியுடன் ஏன் இத்தகைய வீடியோக்களைப் பகிர்கிறாய் என்று மானஸை பின்னூட்டத்தில்கூட சமூகம் கேள்வி கேட்கவில்லை. அதனால்தான், பாலியல் வன்கொடுமை நடந்தால் ஆடை, அது நடந்த நேரம், இடம் என்று லென்ஸ்களை கொண்டு வருகிறது இன்னமும் இச்சமூகம்!
சுஷ்மாவின் பலவீனம் அவள் தனது தந்தையைப் பற்றி மனதில் கட்டியெழுப்பி வைத்திருக்கும் பிம்பம். ’‘என் தந்தை இருந்திருந்தால்? நாம் இருவரும் ஒரே தந்தைக்குப் பிறந்திருந்தால்...’ என்ற எதிர்பார்ப்புகள் அவளின் மாய வலை. இல்லாமல் போன, விட்டுப்போன தந்தைகளை க்ளோரிஃபை செய்வதை நிறுத்தி, வாழ்க்கையின் யதார்த்ததுக்கு உணர்ந்து அடுத்த அத்தியாயத்திற்கு நகர்வதின் அவசியத்தை சுஷ்மா உணர்வாள் அதுவும் அவள் தந்தையாலேயே!
நம் வாழ்க்கையில் அங்கமான உறவுகள், நாம் அங்கமாக்கிக் கொள்ளும் உறவுகள் என எதுவாக இருந்தாலும் அதைக் கவர்ச்சிகரமானதாக ரொமான்டிசைஸ் செய்வது நாம் ஒரு கைவிலங்கை எடுத்து என் கை, கால்களைக் கட்டு என்று அந்த உறவுக்குக் கொடுக்கும் அனுமதி.
இப்படியாக சமூகத்தின் முன் தீர்மானங்களால் மூச்சு முட்டிக் கொண்டிருந்த ரேகா, ஜெயா, சுஷ்மாவுக்கு குப்தாவை அப்புறப்படுத்தும் ‘ப்ராஜக்ட்’ எக்ஸ்ட்ரா சுமையாக வந்து சேர்கிறது. இந்த ப்ராஜக்ட்டில் வான்டடாக ஏறிக் கொள்பவர் குப்தா மகள் ஹேமா.
குப்தாவை விடுவிக்க ரூ.5.5 லட்சம் பிணைத் தொகை கேட்டு தனக்கு பிளாக்மெயில் போன் வந்ததாகச் சொல்கிறாள் அவரின் மகள் ஹேமா. கதைக்கு இது ஒரு ட்விஸ்ட். ரேகா, ஜெயா, ஹேமாவுக்கு இது ஒரு ஷாக்.
மிரட்டல்காரன் சொன்ன குப்பைத் தொட்டியில் பணம் வைக்கப்பட, குப்தாவும் ரேகா அண்ட் கோ பிடியில் இருந்து தப்பிக்க உறைந்துபோகிறார்கள் மூவரும். குப்தா அதன் பின்னர் நேரடி அச்சுறுத்தலாகிறான். ரேகாவின் மனதுக்குள் காலனியை தூண்டிவிட்டு அவன் நிகழ்த்திய அட்டூழியங்களை ஃப்ளாஷ்பேக்காக ஓடச் செய்த அவளை நொறுக்கிப் பார்க்கிறான். அவளுக்கு 2 வாய்ப்புகளும் தருகிறான்.
எப்போதும் சமூகத்தின் விமர்சனங்களால் தங்கள் வாழ்க்கையை சுமந்து கொண்டிருந்தவர்கள், முதன்முறையாக அந்த அழுத்தங்களுக்கு பதிலடி கொடுக்க முற்படுகிறார்கள். அதற்காக அவர்கள் செய்யும் தந்திரங்கள் சுவாரஸ்யமானவை.
மீண்டும் ரேகாவின் வீட்டுக்கு வரும் குப்தா, ரேகாவின் மெத்தையை காமம் கொப்பளிக்கப் பார்ப்பது பெர்வர்ட்களின் புத்தியை வெளிச்சம் போட்டுக் காட்டும். இத்தகைய பெர்வர்ஷன் பெண்களின் அந்தரங்கப் பயன்பாட்டுப் பொருட்களை டெலிவரி செய்யும் ஆன்லைன் டெலிவரி நபர்கள் வரை நீள்கிறது என்பது வேதனை.
குற்றத்தை மறைக்க நினைப்பது, அதற்கு கூட்டுச் சேர்ப்பது, ப்ளான் செய்வது, சொதப்புவது போன்ற சீக்வென்ஸ் எல்லாம் பெரும்பாலும் ஆண்களைச் சுற்றிய க்ரைம் டிராமாக்களிலேயே காணமுடியும். ஆனால் அவற்றை ‘மா பெஹன்’ படத்தில் மூன்று பெண்கள் ஊடாகப் பார்ப்பது சுவாரஸ்யம். அந்த சுவாரஸ்யத்தை சற்றும் குறையாமல் கடத்தியிருப்பார்கள் ரேகா, ஜெயா, சுஷ்மா.
குத்தாட்ட விவரத்தை குப்தா மனைவி, மச்சானுக்கு சொல்லும் ரேகாவும் அவள் மகள்களும் குப்தா மனைவியை வீட்டுக்கு வரவழைக்கும் காட்சி அதிரடி.
குப்தா மனைவி முன்னால் என்ன நடந்தது என்று ரேகா விவரிக்கும்போது, அதுநாள் வரை அவளை சூனியக்காரி என்று கரித்துக் கொட்டிய குப்தா மனைவியின் மவுனம் அவள் தவறை உணர்ந்ததற்கான சாட்சி. நடந்த சம்பவத்தைப் பற்றி 4, 5 வெர்ஷன்களை கேட்டுவிட்டாலும் கடைசியாக அம்மாவின் கண்ணீரோடு வரும் அந்த உண்மை வெர்ஷன் அதுவரை உனக்கு ஏன் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்? உனக்கு எதற்கு ஆண் துணை? உனக்கு எதிர்க்கு சீட்டாட்டம்? என்று தாயின் தவிப்புகள், ஏக்கங்கள், தேவைகளை கேள்வி கேட்ட மகள்களுக்கு ஐ ஓபனர்.
குப்தா வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவான். ‘ச்சீ போடா’ என்ற ரேஞ்சில் அவனை வெளியேற்றுவார்கள் மூவரும். அவன் செல்லும் திசையை நோக்கி மூவரும் செலுத்தும் பார்வையின் வீச்சில் ஆணாதிக்க சமூகத்தை புறமுதுகிட்டு ஓடவைத்த வெற்றியின் கூர்மை தெறிக்கும். அடுத்தக் காட்சியில் தாயைப் போலவே ஜெயாவும், சுஷ்மாவும் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸில் ஜொலிப்பார்கள். ரவிக்கையின் ‘கை’-யை போலத்தான் பெண்கள் தம்மீது சுமத்தப்படும் ஆணாதிக்கத்தையும், அதை தழுவிக் கிடக்கும் அறிவிலித்தனத்தையும் கழற்றி எறிய வேண்டும் என்பதே எண்ட் பஞ்ச்.
| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in