விலங்கு வெப் தொடர், சூரி நடித்த மாமன் உள்பட சில படங்களை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ், நாயகனாக நடித்துள்ள வெப் தொடர், ‘வாரண்ட்’. கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த தொடர், காவல் துறையின் மறுபக்கத்தையும், அதிகாரத்தின் இருண்ட முகத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நம்ரிதா, அருள் ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கவுசல்யா மற்றும் வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். பின்னணி இசை அமைத்துள்ளார். அசோக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜீ 5 வழங்கும் இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். சிவன் பிக்சர்ஸ், எஸ் ஸ்டூடியோஸ் சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், பி. விஷால், பி.எம். ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் டிரெய்லர் அறிமுக விழா, சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் பாண்டிராஜ், சுசீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பிரசாந்த் பாண்டியராஜ் பேசும்போது, “’புரூஸ்லி’ படத்துக்குப் பிறகு படம் இயக்காத நேரத்தில் ‘விலங்கு’ வெப் தொடரை இயக்கினேன். அதற்கு கிடைத்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. விலங்கு போல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதில் நடிகராக மாறியுள்ளேன்” என்றார். இந்த வெப் சீரிஸ் மே 22ம் தேதி முதல் ஜீ 5 தளத்தில் வெளியாகிறது.