சிறப்புக் கட்டுரைகள்

நீதித்துறையில் நிலவும் சில பிரச்சினைகள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 84

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

காவல் துறையில் சில தவறுகள் நடக்கும்போது, ‘காவல் துறையின் ஈரல் கெட்டுவிட்டது’ என்று சொல்லப்படுவது உண்டு. அதேபோல் நீதித் துறையிலும் ஆங்காங்கே தவறுகள். ஊழல்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

நீதித்துறை என்பது ஒரு ஆலயம் போன்றது. நீதி தேவதையாக நீதிபதிகள் இருந்து, துலாக்கோல் போல் சீர்தூக்கிப் பார்த்து நீதி பரிபாலனம் செய்ய வேண்டியது அவர்களின் கடமை. அத்தகைய நீதிபதிகள், தங்களுக்கான கண்ணியத்தைக் காக்காமல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவது நல்லதல்ல.

நமது நாட்டில், மக்கள் தொகைப் பெருக்கத்தால் சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, அதன் விளைவாக வழக்குகளும், நீதிமன்றங்களிலும் வழக்குகளின் தேக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இதனால், தங்களுக்கு நியாயம் கிடைக்க,நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டும் மக்கள், விரைவில் தீர்வுகள் கிடைக்காமல் அவதிப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் ஹேப்பியஸ் கார்பஸ் மனுக்கள் மீது நடைமுறை சிக்கல்களினால் விரைவில் தீர்வு காண இயலவில்லை. குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட கைதிகள் பலரின் வழக்குகள் தண்டனைக் காலம் முடிந்த பிறகுதான் விசாரணைக்கு வருகின்ற அவலநிலை இருக்கிறது.

சித்ராதேவி என்ற பெண் தன்னுடைய கணவர் விபத்தில் இறந்ததால் நஷ்ட ஈடு கிடைக்க 1974-இல் வழக்கு தாக்கல் செய்தும் தீர்வும் கிடைக்காமல், நீண்ட காலமாக நிலுவையிலுள்ளது என்று ஒரு நாளிதழ் வெளிப்படுத்தியது. இதேபோல் 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட வழக்குகள் பைசலாகாமல் இருக்கும் வழக்குகள் பல, அங்கொன்று இங்கொன்றுமாக இந்தியாவில் இருந்து வருகின்றன.

தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் 41,000 வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 58,00,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கீழமை நீதிமன்றங்களில் 26.3 மில்லியன் வழக்குகள் விசாரணை செய்யாமல் குவிந்து கிடக்கின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 4,06,958 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில்தான் வழக்குகள் அதிகமாக நடத்தப்படாமல் பெருமளவில் தேங்கிக் கிடக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, வழக்கு மன்றங்களின் பணிகளைக் குறைக்கவும், வழக்கின் வாதிகள், பிரதிவாதிகள் நீதிமன்றங்களின் பணிகளை சுமுகமாகத் தீர்க்கவும் லோக் அதாலத் என்ற முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

இதனால், தீர்வுகள் மிக விரைவில் கிடைக்கின்றன. 1957-ம் ஆண்டு சட்டத்தின் பிரகாரம் இந்த லோக் அதாலத் நடைமுறைக்கு வந்தது. இதுபோல் தீர்ப்பாயங்களும், நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்களும் மக்களுக்கு பரிகாரம் கிடைக்கின்ற அமைப்புகளாகத் திகழ்கின்றன.

ஒரு கொலை சம்பவம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை முடிந்து நீதி கிடைக்க போராட வேண்டியிருக்கிறது . சாட்சியங்கள் இல்லை என்று தேதி மாற்றப்பட்டு வழக்குகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்றன.

இவ்வாறான, வழக்குகளின் தாமதத்தை அறிய, நீதிபதி ஒருவர் தலைமையில் உச்ச நீதிமன்றத்தினால் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தன்னுடைய அறிக்கையில், கால தாமதத்தை நீக்க விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல், கூடுதல் நீதிபதிகள் நியமனம் என பல பரிந்துரைகளை வழங்கியது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.ஆர்.கண்ணா, 1950-ம் ஆண்டு பெரோஸ்பூர் மாவட்ட நீதிபதியாக தான் இருந்தபொழுது குற்றவியல் வழக்குகளான கொலை வழக்குகளை இரண்டு மாதங்களில் முடித்ததாகக் கூறியுள்ளார். இந்தக் கொலை வழக்குக்குச் சாட்சியங்கள் வரவில்லை என்று ஒத்திவைக்கப்படவில்லை.

அதேபோன்று சென்னை நீதிமன்றத்திலும் ஒரு கொலை வழக்கை ஒரே மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டது உண்டு. மேலும், விரைவு நீதிமன்றங்களும், சமீபத்தில் தொடங்கப்பட்ட மாலை நீதிமன்றங்கள் 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பணி செய்து விசாரணைகளை முடிக்கின்றன. மாலை நேர நீதிமன்றங்கள் தமிழகத்தில் 11 இடங்களில் செயல்படுகின்றன. இந்த நீதிமன்றங்களில் ஒரு மாத சிறைத் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் வரையுள்ள வழக்குகள் விசாரிக்கப்படும்.

வாதங்களுக்கு காலநேரம் நிர்ணயம் அவசியம்

நீதிமன்ற காலதாமதத்துக்கான காரணங்கள் என்னவென்று பார்த்தால், வழக்கு மன்றத்தில் வாதங்களை எடுத்துவைக்க வழக்கறிஞர்கள் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வதே பிரதானமாக உள்ளது. பிரெஞ்சு நாட்டிலுள்ள வழக்கறிஞர்களுக்கு வாதத்தை முடிக்க ஒரு குறிப்பிட்ட காலஅளவு நேரம் மட்டுமே வழங்கப்படும். அந்த நேரத்துக்குள் தன் தரப்பு வாதத்தை வழக்கறிஞர் முடித்துக் கொள்ள வேண்டும். இம்மாதிரியான நடைமுறைகள் நமது நீதித்துறையிலும் கொண்டுவரப்பட வேண்டும்.

வழக்குகளை விசாரிக்கும்போது நடைமுறையிலுள்ள சமூகக் கண்ணோட்டத்துடனும், அதில் ஏற்படும் பிரச்சினைகளைக் கொண்டும் தீர்ப்பு வழங்க வேண்டும். அதேபோல், உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்கு சட்ட சிக்கல்களினால் இரண்டு விதமான தீர்ப்புகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் அந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்பொழுது வழக்கறிஞர்கள் வாதங்களால் அந்த தீர்ப்புகளின் நோக்கமும் மாறுபடுகிறது.

வழக்கறிஞர்கள் ஒரு வழக்கை தாக்கல் செய்துவிட்டு, வழக்கை ஒத்திவைக்க தேவையற்ற வகையில் அவகாசம் கேட்பது நேரத்தை பாழ்படுத்துவதற்கு ஒப்பாகும். சாட்சிகள் வரவில்லை என தொடர்ந்து வழக்கை ஒத்திவைப்பது என்ற முறைக்கு முடிவு கட்ட வேண்டும். காலதாமதத்துக்கு அரசாங்கமும், அரசு வழக்கறிஞர்களும், பல நேரங்களில் காரணமாக இருக்கின்றனர்.

அரசு சார்பில் வழக்கு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய பதில் மனுக்களை தயார் செய்வதில் அரசு வழக்கறிஞர்களுக்கு, அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. உதாரணமாக, ரிட் மனுவில் பதில் மனுவை உடனடியாக தாக்கல் செய்யாமல் இருப்பதால், பல பிரச்சினைகளுக்கு நியாயம் கிடைக்காத சூழ்நிலையும் ஏற்படுகிறது. இதனால் தீர்வு எளிதில் கிடைக்காமல் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

அதேபோல், நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தாமல் உள்ள காரணத்தால், அதிகரித்து வரும் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகளால் இயலவில்லை. நீதிமன்ற நிர்வாகத்தை இன்றைக்குள்ள அறிவியல் மற்றும் சமூகச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும். வழக்கு மன்றங்கள் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்க வேள்டும். அரசியல் தலைவர்களைப் போன்று விளம்பரப் பிரியர்களாக நீதிபதிகள் இருக்கக் கூடாது. துலாக்கோல் நிலையில் நீதியைப் பரிபாலனம் செய்ய வேண்டும்.

வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தத்தாலும் வழக்குகள் தேக்கம் அடைகின்றன. 1980-ம் ஆண்டு டில்லியில் சார்பு நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆறு மாத காலம் வேலைநிறுத்தம் செய்தனர். அவ்வாறான சூழ்நிலைகளில், பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு சுமுகத் தீர்வு காண அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து மக்களும் நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். இன்றைக்கு நீதிமன்றங்களைப் பற்றித் தவறான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு நீதிபதியிடம் ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர் வாதாடினால் அந்த வழக்கில் வெற்றி பெறலாம் என்கிற தவறான எண்ணங்கள் மக்கள் மத்தியில் தற்பொழுது எழுந்துள்ளன.

நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் 1983-ல் இருந்து அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகின்றன. நீதிபதிகள் வி.ராமசாமி, செளமித்ரா சென், பி.டி.தினகரன் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீதான சர்ச்சைகள் குறித்து ஏற்கெனவே நான் பதிவு செய்துள்ளேன்.

கர்நாடக நீதிபதிகள் சிலர் மைசூர் சென்றபொழுது அவர்கள் கேளிக்கையாக நடந்த முறை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. கன்னியாகுமரியில் ஒரு காற்றாலை நிறுவனர் நடத்திய விழாவில் நீதிபதிகள் கலந்து கொண்டது பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்து சர்ச்சைகளை ஏற்படுத்தின.

தேவகவுடா பிரதமராக இருந்தபோது அவரை தலைமை நீதிபதி, ஒரு வழக்கு குறித்து சந்தித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 1983-84-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நடவடிக்கைகள் உளவு பார்க்கப்பட்டன என பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. சமீப காலமாக நீதிபதிகளை குறித்து லஞ்சம், தனிப்பட்ட ஒழுக்கக்கேடுகள், வீட்டுமனை ஒதுக்கீடுக்காக ஆட்சியாளரிடம் மண்டியிடுவது போன்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2004 - 2005 காலகட்டங்களில் பணியாற்றியபோது, ஆர்.சி.லஹோட்டி , வெளியிட்ட கருத்துகளால் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உச்ச நீதிமன்றமும், நாடாளுமன்றமும் ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டன. அப்போதைய மக்களவைத் தலைவர் சோமநாத் சாட்டர்ஜி, சட்ட அமைச்சர் எச்.ஆர். பரத்வாஜ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கடுமையான முறையில் குறிப்பிட்டனர். மேலும், நீதித்துறை தனது எல்லைகளை விட்டுத் தாண்டக் கூடாது என்று சோமநாத் சாட்டர்ஜி திட்டவட்டமாகக் கூறினார்.

நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில், நிலச் சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, உச்ச நீதிமன்றம் தெரிவித்த ஆணைகளை எதிர்த்தும், அதன் அணுகுமுறையைக் கண்டித்தும் மகராஷ்டிரத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் நாத்பாய், நாடாளுமன்றத்தில் கடுமையாகப் பேசினார்.

அதேபோல், நீதிமன்றத்தின் ஆணைகளை நிறைவேற்றாமல் பல மாநில அரசுகள் கிடப்பில் போடுகின்றன. கேரளா அரசு, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பான ஆணைகளையும், பஞ்சாப் அரசு, சட்லெஜ் - யமுனா கால்வாய் குறித்த ஆணைகளையும் மதிக்காமல் நடந்து கொண்டதால் தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தீர்வு ஏற்படவில்லை. சட்லெஜ் - யமுனா கால்வாய் பிரச்சினையில் அரியானா - டில்லி மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

முன்பு ஒருமுறை, பணத்தின் கனத்தைக் கொண்டே நீதி கிடைக்கிறது என்று ஒரு கேரள அமைச்சர் குற்றம்சாட்டினார். இதற்கு எதிராக கேரள உயர் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியது. இதனால், உச்ச நீதிமன்றத்தின் மூலமாக அந்த அமைச்சர் மன்னிப்பு கேட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக முலாயம் சிங் யாதவ் இருந்தபோது, டில்லியை அடுத்துள்ள நொய்டா பகுதியில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவருக்கு முறைகேடாக வீட்டு மனை ஒதுக்கினார் என்ற குற்றச்சாட்டை மத்திய அமைச்சராக இருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் முன்வைத்தார்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், நீதிபதி சத்தியதேவ் பிறப்பித்த ஆணையும், பிற்காலத்தில் பி.எச்.பாண்டியன் பேரவைத் தலைவராக இருந்தபோது, நீதிபதி டி.என்.சிங்காரவேலு பிறப்பித்த ஆணையும் சட்டப்பேரவையில் ரத்து செய்த சம்பவங்களும் நடந்துள்ளன.

அதேபோல் கடந்த காலத்தில், நில ஆர்ஜித வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தேவையில்லாமல் இடைக்கால உத்தரவுகளை வழங்குகின்றது என்று சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டதும், நீதித்துறையைப் பற்றி அப்போதைய அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி கடுமையாக விமர்சித்ததும் சட்டப்பேரவை பதிவுகளில் உள்ளன.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அட்வகேட் ஜெனரலாக அழகிரிசாமி நியமிக்கப்பட்டபோது, அன்றைய சட்ட அமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் கருத்துகளை ஒட்டி, நீதித் துறைக்கும் அரசுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இவ்வாறு தமிழக சட்டமன்றத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் இடையே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தே அவ்வப்போது கடுமையான மோதல்களும், விவாதங்களும் நடந்து வந்துள்ளன.

நீதிமன்றங்களில் இடைக்கால நிவாரணம் கொடுக்கும்போது சரியான நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு பிரச்சினையில் ஒரு நீதிபதி இடைக்கால நிவாரணம் வழங்குகிறார். ஆனால் அதே பிரச்சினையில் வேறு ஒருவர் வழக்கை தாக்கல் செய்து, வேறு நீதிபதியிடம் வரும்பொழுது இடைக்கால நிவாரணம் மறுக்கப்படுகின்ற சூழ்நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட சம்பவங்கள் மக்கள் மத்தியில் நீதித்துறை குறித்து தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விடும் என்று அச்சம் ஏற்படுகிறது. சீசரின் மனைவி போல சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக நீதித்துறை இயங்கவேண்டும்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைப் பொறுத்தவரை, குறிப்பாக 1980-ம் ஆண்டிலிருந்து அதிகமாகிக் கொண்டே வருகின்றன. அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்குகின்ற ஆணைகளை மதிக்காமல் அதிகாரிகள் நடந்து கொள்ளும் மெத்தனப்போக்கு கண்டனத்துக்குரியது. அவமதிப்பு வழக்குகளில் அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பினால், அதில் கவனம் செலுத்தாமல் அரசாங்கம் ஒரு சில சமயங்களில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது.

உச்ச நீதிமன்றத்தில் வெறும் அரசியல் சாசனம் சம்பந்தப்பட்ட வழக்குகளை மட்டும் விசாரிக்க வேண்டும். மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தில் தனியாக மேல்முறையீடு தலைமை நீதிமன்றம் நிறுவப்பட வேண்டும். அதேபோல், நீதிமன்றத்துக்கு வேண்டிய வசதிகளை முன்னுரிமை கொடுத்து உடனுக்குடன் அரசு செய்ய வேண்டும்.

இன்றைக்குத் தமிழகத்தில் பல்வேறு உரிமையியல் நீதிமன்றங்கள் சாதாரண வாடகைக் கட்டிடங்களில், அடிப்படை தளவாடப் பொருட்கள் கூட இல்லாத சூழ்நிலையில் செயல்படுகின்றன. நீதித்துறை ஜனநாயகத்தில் முக்கிய அங்கம் என்று நினைத்து அரசு செயல்பட வேண்டும். இலவச சட்ட மையங்கள் ஏழை எளியவர்களுக்கு நீதிமன்ற படிகளை ஏற ஓரளவு துணையாக உள்ளன.

ஆட்சியாளர்களால் அடிப்படை உரிமைகள், மக்கள் நலன்களில் பாதிப்பு ஏற்படும்பொழுது, அதை எதிர் கொள்ள மக்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடை நீதித்துறை. அத்துறையின் கண்ணியம், கீர்த்தி காக்க உரிய மாற்றங்கள், திருத்தங்கள் இன்றைக்கு அவசிய தேவையாக உள்ளது என்றால் அது மிகையில்லை.

(தொடர்வோம்...)

SCROLL FOR NEXT