எந்த துறையில் பணியாற்றினாலும் அதில் சாமானிய மக்களின் நலன் இருக்க வேண்டும் என, விஞ்ஞானி சிவகுமார் அறிவுறுத்தினார்.
சென்னை, வியாசர்பாடி, மல்லிகைப்பூ காலனியில் பிறந்தவர் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு. இவர் தனது இல்லத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கலாம் சபா என்ற நூலகம் மற்றும் வழிகாட்டி மையத்தை நிறுவியுள்ளார்.
இதை கடந்த 2024-ம் ஆண்டு நவ. 8-ம் தேதி விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை திறந்து வைத்தார். வியாசர்பாடி பகுதி மாணவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கவே இங்கு நூலகம் அமைத்திருப்பதாகவும். இந்த நூலகம். மாணவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக அமையும் என்றும் டில்லி பாபு தெரிவித்திருந்தார்.
கலாம் - சபா நூலகம் சார்பில், மாதாந்திர வழிகாட்டி கூட்டத் தொடரை (இணைய வழியில்) டில்லிபாபு நடத்தி வருகிறார். அதில் சிறந்த ஆளுமைகளை அழைத்து, கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அதன் தொடர் நிகழ்வாக, 'இந்திய போர் பீரங்கிகள் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு' என்ற தலைப்பில், ஆவடி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றிய விஞ்ஞானி சிவகுமார் நேற்று பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது மாணவர்களுக்கு போர் ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளின் செயல்பாடு, இந்தியாவில் போர் ஆயுதங்களின் தயாரிப்பு தொடங்கப்பட்ட வரலாறு குறித்தும், போர் ஆயுதங்களின் தொழில் நுட்பங்கள். அதன் பயன்பாடு ஆகியவற்றையும் எடுத்துரைத்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. ஆனால், அதில் நமது வாழ்க்கைக்கு தேவையான சில பாடங்களை மட்டும் நாம் கற்றுக் கொண் டால் போதுமானது.
கணிதம், அறிவியல் பாடங்களை கற்றுக் கொள்வது மிகவும் கடினம் என கூறுவார்கள். அது உங்களை பயமுறுத்த சொல்வார்கள். மேலும், நமக்கு என்ன தேவை என்பதை நாம் அறிந்து அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும். நான் அப்துல்கலாம் உடன் பணியாற்றி உள்ளேன்.
அவர் ஒவ்வொரு முறையும் புதிதாக ஏதாவது கண்டுபிடித்தால். அது சாமானிய மக்களுக்கும் உதவ வேண்டும் என கூறுவார். நீங்கள் எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாவோ அல்லது எந்த துறைக்கு சென்றாலும் உங்களின் பணி சாமானிய மக்களுக்காகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.