செம்மஞ்சேரியில் ‘காவல் கரங்கள்’ பிரிவு போலீஸாரால் மீட்கப்பட்ட மூதாட்டியை அவரது குடும்பத்தினரிடம் காவல் கூடுதல் ஆணையர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி, உதவி ஆணையர் (மக்கள் தொடர்பு) எம்.எஸ்.பாஸ்கர், ஆய்வாளர் மேரி ரஜு ஆகியோர் ஒப்படைத்தனர்.
சென்னை: மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மூதாட்டியை மீட்டு குடும்பத்தினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
செம்மஞ்சேரி பேருந்து நிலையம் அருகே வாய் பேச முடியாமல், காது கேட்காமல், மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் பரிதாபமாக சுற்றித்திரிவதாக சென்னை காவல் துறையில் உள்ள ‘காவல் கரங்கள்’ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பிரிவு போலீஸார் சம்பந்தப்பட்ட மூதாட்டியை மீட்டு முடிச்சூரில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்து பராமரித்தனர்.
அவரது புகைப்படம் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இதில் மீட்கப்பட்டவர் சென்னை முத்தியால்பேட்டையை சேர்ந்த மும்தாஜ் (65) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது சகோதரி மகனிடம் காவல் கூடுதல் ஆணையர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி ஒப்படைத்தார். காவல் உதவி ஆணையர் (மக்கள் தொடர்பு) பாஸ்கர், காவல் கரங்கள் பிரிவு காவல் ஆய்வாளர் மேரி ரஜு ஆகியோர் உடனிருந்தனர்.
விசாரணையில், மாற்றுத் திறனாளியான மூதாட்டி மும்தாஜை கடந்த 7-ம் தேதி முத்தியால்பேட்டை பகுதியிலிருந்து, கொடுங்கையூர், எஸ்.ஏ.காலனி 10-வது தெருவில் உள்ள சகோதரி மகன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது, காணாமல் போனது தெரியவந்தது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் இதுவரை 9,285 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ளோர் மீட்கப்பட்டனர். இதில் 1,498 பேர் காணாமல் பரிதவித்த அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.