சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் 18 வயதான பிரின்ஸ் படேல். சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வரும் பிரின்ஸ், பிகேஆர் பிளாகர் என்ற பெயரில் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார். வேகமாக பைக் ஓட்டுவதில் வல்லவரான பிரின்ஸ் படேல், தனது கேடிஎம் டியூக் மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் ஓட்டி அதை வீடியோவாகப் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் அண்மையில் சூரத்தில் உள்ள கிரேட் லைனர் மேம்பாலத்தில், பிரின்ஸ் படேல் 140 கிலோமீட்டர் வேகத்தில் பைக்கை ஓட்டியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இவரது வாகனம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் பிரின்ஸ் படேல் தலை தனியாக துண்டிக்கப்பட்டு உடல் தனியாக விழுந்தது. பைக் வேகமாக வந்ததால் தரையில் விழுந்தபோது பிரின்ஸ் படேல் பலமுறை உருண்டார். அப்போதுதான் இவரது தலை துண்டிக்கப்பட்டு உடல் தனியாக விழுந்து சிதறியது. பைக் ஓட்டியபோது, பிரின்ஸ் படேல் ஹெல்மெட் அணியவில்லை என்று தெரியவந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் இந்த புதிய பைக்கை, பிரின்ஸ் படேல் வாங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. பிரின்ஸ் படேலின் தாய், குடிசைப்பகுதியில் வசித்து வருகிறார். தினந்தோறும் பால் விற்று அதில் வரும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.