புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில், மகளிர் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வியில் முடிந்தது.
அரசியலமைப்பு சட்டத் திருத்தம் போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மூன்றில் 2 பங்கு எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆனால், இரு அவைகளிலும் அந்தளவுக்கு ஆதரவு இல்லை என்று தெரிந்தும் இந்த மசோதாவை பாஜக அறிமுகப்படுத்தியது. இது எதிர்க்கட்சிகளுக்கு விரித்த வலை என்று கூறப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டதாகவே தற்போது அறியப்படும். அதன்மூலம் எதிர்க்கட்சிகள் பாஜகவின் அரசியல் பொறியில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறு கிறது. இந்தச் சூழலில், மகளிர் மசோதா தோல்விக்குக் காரணம் எதிர்க்கட்சிகள்தான் என்ற கருத்தை தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடம் எடுத்துரைக்க பாஜக முயற்சிக்கும் என்கின்றனர். இது மேற்கூறிய 2 மாநில தேர்தலில் சாதகமாக மாறும் என்று பாஜக.வினர் கூறுகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக.வுக்கு பெண் வாக்காளர்களின் ஆதரவு அதிகமாக கிடைத்தது. அதை மேலும் வலுப்படுத்த பாஜக முயற்சிக்கும். குறிப்பாகப் பெண் வாக்காளர்கள் முக்கிய இடம் பெற்ற மேற்கு வங்க மாநிலத்தில், பாஜக இந்தப் பிரச்சினையை ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடும்.
எதிர்க்கட்சிகளின் சிக்கல்கள் அதோடு முடிந்துவிடவில்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்குள் ஒபிசி இட ஒதுக்கீடு கோரிக்கைக்கும் பாஜக தனது வாதங்களைத் தயாராக வைத்துள்ளது.
பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்குள் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் நிராகரித்தார். மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அவர் கூறினார்.
அதேபோல் ஒபிசி பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக, சாதிவாரி கணக்கெடுப்பு, அதன்பிறகு மக்களவையில் பரிசீலனை போன்ற நடைமுறைகளுக்குப் பிறகு முடிவெடுக்கலாம் என்று அமித் ஷா உறுதி அளித்துள்ளார். பாஜகவின் இந்த வாதங்களை எதிர்க்கட்சிகள் சமாளிப்பது கடினமாக இருக்கும்.
எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறவில்லை என்றாலும், அது பாஜகவின் அரசியல் செயல் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறியுள்ளது. தேர்தலுக்காக எஞ்சியிருக்கும் பிரச்சார நாட்களில், பாஜக தனது உத்தியை திறம்படப் பயன்படுத்துவதில் அதன் வெற்றி அடங்கியுள்ளது.