புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் இருப்பவர்கள் யார்? என்று கேட்டு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து பாஜக அடிக்கடி கேள்வி எழுப்பி வருகிறது. மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நேற்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
அதில், ராகுல் காந்தி தொப்பி அணிந்து காணப்படுகிறார்; அவருடன் தலையில் துணி மற்றும் குளிர் கண்ணாடி அணிந்த ஒரு பெண்ணும், ஒரு சிறுவனும் படகில் உள்ளனர். நீல நிற முழுக்கை நீச்சல் உடையில் இருக்கும் அந்த சிறுவன் ராகுலுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் அமர்ந்திருக்கிறான்.
அமைச்சர் கிரிராஜ் சிங், “ராகுல் ஜி.. இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது? எப்போது எடுக்கப்பட்டது? இந்த புகைப்படத்தில் உங்களுடன் இருக்கும் நபர்கள் யார்? இதை நான் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநடே கூறும்போது, “இந்தப் படத்தில் இருப்பவர்கள் ராகுல் காந்தியின் நண்பரின் மனைவியும் குழந்தையும் ஆவர். அவர்கள் குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தனர்.
அந்த நண்பர் இந்தப் படத்தில் இல்லை. ஒரு பெண்ணையும் ஆணையும் ஒன்றாகப் பார்க்கும்போது மோசமான எண்ணங்களை மட்டுமே கொண்டிருக்கக்கூடிய நபர் நீங்கள். உங்கள் சொந்த விரக்திகள் உங்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள். இது கண்டிக்கத்தக்கது” என்றார்.
இதுகுறித்து இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் (ஐஓசி) அமைப்பின் சமூக ஊடகப் பொறுப்பாளர் அவி தாண்டியா கூடுதல் விவரங்களை அளித்துள்ளார். அவர் கூறும்போது “ராகுல் காந்தியின் இந்தப் புகைப்படம் டெக்சாஸில் உள்ள ரே ராபர்ட்ஸ் ஏரியில் எடுக்கப்பட்டது. இது உண்மையா இல்லையா என்பதை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நீங்களே தெரிந்துகொள்ளலாம்” என்றார்.