கோப்புப் படம்

 
இந்தியா

குழந்தைத் திருமணம் நிகழ்வதை தடுக்க அரசு என்ன செய்கிறது? - மத்திய அமைச்சர் விளக்கம்

மோகன் கணபதி

புதுடெல்லி: குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்க மூன்று கட்டங்களாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது அவர் கூறியது: “இந்தியாவில் குழந்தை திருமணம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், 2024 நவம்பர் 27 அன்று குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா என்ற தேசிய அளவிலான இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை உணரும் வகையில், சிறுமிகள், பெண்கள் இடையே கல்வி, திறன், தொழில்முனைவு ஆகியவற்றை ஊக்கப்படுத்த இது முக்கியமான ஒன்றாகும்.

          

குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினர் இடையே ஏற்படுத்தும் வகையில் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது.

2025 நவம்பர் 27 முதல் டிசம்பர் 31 வரை நடைபெற்ற முதற்கட்டப் பணியில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விவாதங்கள், கட்டுரைப் போட்டிகள் மற்றும் உறுதிமொழி மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

2-ம் கட்டமாக 2026 ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை மத வழிபாட்டுத் தலங்கள், திருமணம் தொடர்பான சேவை வழங்குவோர், உணவுத் தயாரிப்போர் ஆகியோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

3-வது கட்டமாக 2026 பிப்ரவரி 1 முதல் மார்ச் 8 வரை கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் குழந்தை திருமணம் இல்லாத பகுதிகள் என்று தீர்மானம் நிறைவேற்றுவதை வலியுறுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குழந்தை திருமணம் இல்லாத இந்தியா இணையதளப் பக்கத்தில் (https://stopchildmarriage.wcd.gov.in) 28 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர். குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா இயக்கத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 6 கோடிக்கும் மேற்பட்டவர்களை சென்றடைந்துள்ளது” என்று அன்னபூர்ணா தேவி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT