கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. மாலை ஆறு மணிக்குள் வாக்குப் பதிவு மையங்களுக்கு வந்தவர்களுக்கு டோக்கன்கள் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 152 தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 1,478 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 3.60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. அது முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கத் தொடங்கினர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க மத்திய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 2.4 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகளும் பதிவான நிலையில், மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவாகின. மாலை 6 மணி அளவில் 91.35% வாக்குகள் பதிவாகின. 3.60 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. எனினும், அதற்குள்ளாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், துல்லியமான வாக்குப் பதிவு பிறகே தெரிய வரும்.
மாலை 5 மணி அளவில், அலிபுர்துவாரில் 88.74% வாக்குகளும், பன்குராவில் 89.91% வாக்குகளும், பிர்பும்-ல் 91.55% வாக்குகளும் பதிவாகின. கூச் பெஹாரில் 92.07%, தெற்கு தினாஜ்பூரில் 93.12%, டார்ஜிலிங்கில் 86.49%, ஜல்பைகுரியில் 91.20%, ஜார்கிராமில் 90.53%, கலிம்போங்-ல் 81.98%, மால்டாவில் 89.56% வாக்குகள் பதிவாகின. முர்ஷிதாபாத்தில் 91.36%, மேற்கு பர்த்துவானில் 86.89%, மேற்கு மிட்னாபூரில் 90.70%, கிழக்கு மிட்னாபூரில் 88.55%, புருலியாவில் 87.35%, வடக்கு தினாஜ்பூரில் 89.74% வாக்குகள் பதிவாகின.
முர்ஷிதாபாத் தொகுதி உட்பட சில தொகுதிகளில் சிற்சில அசம்பாவித சம்பவங்கள் நடந்தன. இருந்தபோதிலும், பெருமளவில் வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்தது. குறிப்பாக, இந்த முறை மத்திய பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.