இந்தியா

மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம்: மேற்கு வங்க அரசு உத்தரவு

ஆர்.ஷபிமுன்னா

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில மதரஸாக்கள் அனைத்திலும் வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாகப் பதவி ஏற்ற முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அரசு ஆட்சி இழந்திருந்தது. மேற்கு வங்கத்தில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த பாஜகவின் முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றது முதலே பல அதிரடி நடவடிக்ககள் எடுக்கப்படுகின்றன.

அந்தவகையில், மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்து மதரஸாக்களிலும் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசின் ஒரு முக்கிய முடிவாக எடுக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்களில் வகுப்புக்களுக்கு முன்பான தம் பிரார்த்தனைக் கூட்டங்களின் போது ‘ ‘வந்தே மாதரம்' பாடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை, அம்மாநிலத்தின் சிறுபான்மையினர் நலன் மற்றும் மதரஸா கல்வித் துறை வெளியிட்டுள்ளது. பழைய விதிமுறைகளுக்கு மாற்றாக, மதரஸாக்கள் இனி இந்த உத்தரவை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை, அரசு நடத்தும் ஆங்கில வழிக்கல்வியின் மாதிரி மதரஸாக்கள் முதல், அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத அனைத்து மதரஸாக்களுக்கும் சமமாகப் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, மே 14, 2026 அன்று, முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 'வந்தே மாதரம்' பாடுவதைக் கட்டாயமாக்கியிருந்தது.

தற்போது, இதே கொள்கை மதரஸாக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அனைத்து மதரஸா நிர்வாகிகளும் மற்றும் கல்வி நிறுவனத் தலைவர்களும் இந்த உத்தரவை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT