கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்று வரும் முதல் கட்டத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.77% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று மற்றும் ஏப்ரல் 29 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்கள் நடக்கின்றன. இன்று 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 1,478 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 3.60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மத்திய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 2.4 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாலை 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஒரு சில தொகுதிகளில் பதற்றம் நிலவினாலும், பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமைகளை ஆற்றி வருகிறார்கள்.
அலிபூர்துவார், பன்குரா, பிர்பூம், கூச் பெஹார், தெற்கு தினாஜ்பூர், டார்ஜிலிங், ஜல்பைகுரி, ஜார்கராம், மால்டா, புருலியா, வடக்கு தினாஜ்பூர், மேற்கு மிட்னாபூர், கலிம்போங் உள்ளிட்ட நகரங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். பணி நிமித்தமாக மேற்கு வங்கத்துக்கு வெளியே சென்ற தொழிலாளர்கள் பலரும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் வாக்களிக்கும் நோக்கில் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் உதவியுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருவதைப் பார்க்க முடிகிறது. முதல்முறை வாக்காளர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது வாக்கினை செலுத்திவிட்டு அதுகுறித்த செல்பி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பலர் குழுவாகவும் புகைப்படங்களை பகிர்ந்த வருகின்றனர். அந்த வகையில் தேர்தல், வாக்காளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு திருவிழாவாக மாறி இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி இருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சாந்தனு சென், “மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் விதத்தைப் பார்க்கும்போது பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் முடிவில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. மம்தா பானர்ஜியை நான்காவது முறையாக முதல்வராக அவர்கள் வாக்களித்து வருகின்றனர்” என தெரிவித்தார்.
இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் குமார்கஞ்ச் தொகுதி பாஜக வேட்பாளர் சுவேந்து சர்க்காரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து சர்க்கார், “குமார்கஞ்ச் பகுதியில் எங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் பலர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. நான் 24ம் எண் வாக்குச்சாவடிக்குச் சென்றபோது அவர்கள் எங்களை தாக்கினர். இது அச்சமூட்டும் சூழலை உருவாக்கும் முயற்சி” என குற்றம் சாட்டினார்.
மற்றொரு பாஜக வேட்பாளர் அக்னிமித்ரா பால், தனது கார் தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ரஹ்மத் நகர் பகுதிக்குச் சென்றபோது பாறை போன்ற ஒரு பெரிய கல் எனது காரின் மீது வீசப்பட்டது. இதில் காரின் பின்பகுதி முழுமையாக சிதைந்து போனது. கண்ணாடிகள் முற்றிலுமாக நொறுங்கிவிட்டன.
இறைவன் அருளால் எனக்கோ, எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை. எனினும், காரின் பின் பகுதியில் அமர்ந்திருந்த எனது செயலாளர் சிறிய அளவில் காயமடைந்தார். இதுபோன்ற சம்பவங்களின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் புரியக்கூடியதே” என தெரிவித்தார்.