இந்தியா

‘நேபாளத்தில் மரணத்தை நேரில் பார்த்தோம்’ - அசாம் தொழிலாளர்கள் உருக்கம்

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக அங்கு சிக்கித் தவித்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ளனர், மரணத்தை நேரில் பார்த்தோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உள்நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். அந்த வகையில் மேல் திரிசூலி-1 நீர்மின் திட்டத்தில் பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 16 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, அசாம் மாநில அரசின் உதவியுடன் நேபாள மீட்புக் குழுவினர் அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அசாம் வந்து சேர்ந்தனர். அதேநேரம் மற்ற 8 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்றும் அவர்களை தேடும் பணி தொடர்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அசாம் திரும்பிய பர்மன் கூறும்போது, “பெரிய சத்தத்தைக் கேட்டதும், ஏதோ பெரிய ஆபத்து நடந்துவிட்டது என்பதை உணர்ந்து மலைகளை நோக்கி ஓடத் தொடங்கினோம். நாங்கள் இறுதியில் உச்சியை அடைந்து அங்கேயே 2 நாட்களாக உணவு, குடிநீர் இன்றி தங்கி இருந்தோம்.

இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர்கள் நாங்கள் இருப்பதை அறிந்ததும், குடிநீர் மற்றும் பிஸ்கட்களை வீசினர். பின்னர் ராணுவம் எங்களை பத்திரமாக மீட்டது” என்றார். உயிர் தப்பிய கவுதம் தாஸ் கூறும்போது, “இந்த அனுபவத்தை எப்போதுமே மறக்க முடியாது. நான் மரணத்தை நேரில் பார்த்தேன், எப்படியோ உயிர் பிழைத்துவிட்டேன்" என்றார்.

SCROLL FOR NEXT