கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 23, 29-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்கத்தில் மீன் உணவுக்கு தடை விதிக்கப்படும் வாய்ப்புள்ளது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், பாஜகவினர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இங்குள்ள மீ்ன் உணவு கலாச்சாரம் தெரியாது என்றும் முதல்வர் மம்தா பேசி வருகிறார்.
‘மீன் மற்றும் சாதம்’ என்பது மேற்கு வங்க மக்களின் உணவு பழக்கம் மட்டுமல்ல, அது அவர்களின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. துர்கை பூஜையில் கூட அசைவ உணவு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அங்கு அனைத்து மக்களும் மீன் உணவை சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில்தான் மீன் உணவுக்கு பாஜக தடை விதிக்கும் என்ற பிரச்சார அஸ்திரத்தை முதல்வர் மம்தா பானர்ஜி கையில் எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் இந்த உணவு அரசியல் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்க மக்களின் அசைவ உணவு பழக்கத்தில் தலையிடும் என்றும், ‘சைவ உணவை’ திணிக்க முயலும் என்றும் விமர்சித்து வருகிறது. இதையடுத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தலைவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பாஜக வேட்பாளர்கள் தாங்கள் மீன் மற்றும் சாதம் சாப்பிடும் காட்சிகளை படம்பிடித்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, பிதான் நகர் தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் சரத்வத் முகோபாத்யாய், கட்லா மீனை கையில் ஏந்தியபடி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது, அவர், “பாஜக ஒருபோதும் மீன் அல்லது இறைச்சிக்குத் தடை விதிக்காது” என்றும் அவர் உறுதியளித்தார்.
மேற்கு வங்க கலாச்சாரத்தில் மீன் என்பது சுப காரியங்களின் அடையாளம் என்பதால், மக்களின் உணர்வுகளைக் கவர இரு கட்சிகளும் மீன் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதை புரிய வைக்கும் விதமாக வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு பாஜக தலைவர்கள், வேட்பாளர்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.