புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ஜனவரி மாதத்தில் குளிர் சீராக அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 4.2 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இது டெல்லியில் குளிர்காலத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாகும். டெல்லியும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் மூடுபனியுடன் கூடிய குளிர் அலை காரணமாக நடுங்குகிறது. இத்துடன் வீசும் பலத்த காற்று குளிரை மேலும் அதிகரித்துள்ளது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா உட்பட வட மாநிலங்கள் முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான குளிர் அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாநிலங்களிலும் டெல்லியைப் போன்று, மிகக் குளிரான காலைப் பொழுது 4.2 டிகிரி செல்சியஸில் பதிவாகி உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத் தகவலின்படி வெள்ளிக்கிழமை பெய்த வழக்கத்துக்கு மாறான மழையை தொடர்ந்து இந்த திடீர் வெப்பநிலை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மழையே தலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பநிலையை குறைத்துள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் நேற்றைய குளிர் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கு முன் 2023, டிசம்பர் 4, 5-ல் வெப்பநிலை 5.6 டிகிரி செல்சியஸாகவும், டிசம்பர் 1-ம் தேதி 5.7 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபோது, தலைநகரில் இதேபோன்ற குளிர் காணப்பட்டது.
கடும் குளிர் காரணமாக தலைநகரில் மின்சார நுகர்வு அதிகரித்துள்ளது. மக்கள் குளிரைத் தவிர்க்க ஹீட்டர்கள் மற்றும் பிற மின் சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், டெல்லியில் மின்சாரத் தேவை 6,087 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இது குளிர்கால மாதங்களில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும்.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், பிஹார் மற்றும் ம.பி.யின் சில பகுதிகளில் மக்கள் குளிரில் நடுங்கிக் கொண்டுள்ளனர். இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்டிலும் கடுமையான குளிர் நிலவுகிறது. சில இடங்களில் உறைபனியும் காணப்படுகிறது. உறைபனியுடன் கூடிய கடும் குளிர் காரணமாக வட மாநிலங்களின் விமானங்கள் மற்றும் ரயில் சேவைகளில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.