லக்னோ: உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் பதவிக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், லக்னோவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மத்திய தேர்தல் அதிகாரியும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நேற்று கூறும்போது, “உத்தர பிரதேச பாஜக தலைவராக மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஒருமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
இதையடுத்து பங்கஜ் சவுத்ரிக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுவரை இப்பதவியில் இருந்த பூபேந்திர சவுத்ரி கட்சிக் கொடியை பங்கஜ் சவுத்ரியிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பங்கஜ் சவுத்ரி தற்போது கிழக்கு உத்தர பிரதேசத்தின் மஹாராஜ் கஞ்ச் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக (7-வது முறை) உள்ளார்.