இந்தியா

குறுகிய கால ஹஜ் புனிதப் பயணம்: மத்திய அரசு அறிமுகம்

செய்திப்பிரிவு

கொச்சி: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தப் பயணமானது 40 முதல் 45 நாட்கள் கொண்டதாக இருக்கும். இந்நிலையில், குறுகிய கால ஹஜ் பயணத் திட்டத்தை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்துள்ளது.

தொழில், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நீண்ட நாட்கள் பயணம் செய்யும்போது அவர்களால் தங்களது தொழிலை கவனித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, அவர்களுக்கு உதவும் பொருட்டு இந்த 20 நாள் ஹஜ் பயணத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறுகிய காலத் திட்டம் என்றாலும், ஹஜ் பயணத்தில் செய்யப்படும் மத ரீதியிலான சடங்குகள் அனைத்தும் இதில் இடம்பெறும் என்று மத்திய சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.

கொச்சியில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் நேற்று கூறும்போது, ‘‘இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் செல்ல முடியும். அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது. ஹஜ் பயணம் செல்லும் முஸ்லிம் மக்களிடமிருந்து பெறப்பட்ட யோசனைகள் அடிப்படையில் இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT