கொல்கத்தா: மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் நேர்முக உதவியாளர் சந்திரநாத் ராத்தை (42) கடந்த 6-ம் தேதி இரவு மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
இதுதொடர்பாக சந்தேகத்தின்பேரில் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: மர்ம நபர்கள் ஓட்டி வந்த காரை சம்பவ இடத்திலேயே நிறுத்திவிட்டு, 2 பைக்குகளில் அவர்கள் தப்பிச் சென்று உள்ளனர். பின்னர் இரு பைக்குகளையும் சுமார் 4 கி.மீ. தொலைவில் நிறுத்திவிட்டு அங்கிருந்து கொலையாளிகள் தப்பியோடி உள்ளனர்.
காரின் பதிவெண் போலி என்பது தெரிய வந்துள்ளது. மேலும் காரின் சேசிஸ் எண் முழுமையாக சேதப்படுத்தப்பட்டு உள்ளது. கைப்பற்றப்பட்ட இரு பைக்குகளும் திருடப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது. இதில் ஒரு பைக்கின் பதிவெண் போலி. மற்றொரு பைக்கின் பதிவெண்ணின் (WB44D1990) அடிப்படையில் அதன் உரிமையாளர் பிடிபட்டார்.
ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே தனது பைக் திருடு போய் விட்டதாகவும் போலீஸில் புகார் அளித்திருப்பதாகவும் அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். மிக நீண்ட காலமாக திட்டமிட்டு கூலிப்படை மூலம் சந்திரநாத் ராத் கொலை செய்யப்பட்டு உள்ளார். இதன் பின்னணியில் இருப்பவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.