புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. அன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைந்த பிறகு, மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு பிரம்மாண்டமான கலாச்சார விருந்து அளிக்கப்பட்டது. அதனுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. தலைவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த இரவு விருந்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உணவு வகைகளும் பழைய டெல்லி தெருக்கடை உணவு வகைகளும் இடம்பெற்றிருந்தன.
தொடக்க உணவுகள்: கடுகு, தேங்காய், கருவேப்பிலை மணத்துடன் ஆவியில் வெந்த கடலைமாவு ரோலான ‘காண்ட்வி மில்-ஃபியூய்’ மற்றும் புதினா மணத்துடன் ஷீர்மல் ரொட்டியுடன் பரிமாறப்படும் ‘கும்ப் கலவுதி’ காளான் கபாப்.
முதன்மை உணவுகள்: பனீர் லபாப்தார், குங்குமப்பூ மற்றும் மமரா பாதாம் சேர்த்த இமயமலை மோரல் காளான்களுடன் கூடிய குச்சி மர்மிக், தென்னிந்திய முறைப்படி தேங்காய் எண்ணெயில் தாளிக்கப்பட்ட கேரட் பீன்ஸ் பொரியல், தக்காளி பெல்லே சாரு, தினை புலாவ் மற்றும் பீட்ரூட் ரைதா.
இனிப்புகள்: பழைய டெல்லி பாணி பழக்கூட்டுடன் ஜிலேபி மற்றும் மல்பெரி பழங்கள், தங்க இலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஷாஹ்தூட் ஃபிர்னி.
கலாச்சாரக் கொண்டாட்டம்: கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘பிரிக்ஸ் சிம்பொனி’ என்ற இந்த நிகழ்ச்சியில், 160 இந்திய, சர்வதேச கலைஞர்கள் பங்கேற்றனர்.
பரதநாட்டியம், குச்சிபுடி, ஒடிசி, கதக் நடனங்களும், பாரம்பரிய இசைக்கருவிகளின் நாதமும் இந்த நிகழ்ச்சியை அலங்கரித்தன. வெளியுறவு அமைச்சகத்தின் இந்திய கலாச்சாரத் தொடர்பகம் கலை நிகழ்ச்சியை வழிநடத்தியது.