புதுடெல்லி: பாஜக எம்.பி.யான போஜ்ராஜ் நாக், எலுமிச்சைப்பழத்தை வெட்டியதன் மூலம் மழையை நிறுத்தியதாகக் கூறினார். இவரது பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த அம்மாநில முதல்வர் விஷ்ணுதேவ் சாய் உள்ளிட்டோர் சிரிப்பை அடக்க முடியாமல் திணறினர்.
சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்.பி.யான போஜ்ராஜ் நாக், பாலோட் மாவட்டம் டூண்டிலோரா பகுதியில் நேற்று நடைபெற்ற ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டார். ‘மஹ்தாரி வந்தன் யோஜனா’ எனும் திட்டத்தின் 31-வது தவணையை வெளியிடுவதற்கான நிகழ்ச்சி அது. அப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, பலத்த மழையும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணுதேவ் சாய் கலந்து கொண்டார். முதல்வர் அமர்ந்த மேடையில் பாஜக எம்.பி. போஜ்ராஜ் நாக் பேசும்போது, “மோசமான வானிலைக்கு மத்தியிலும் முதல்வரின் வருகைக்கான ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டன. திங்கட்கிழமை முதலே வானிலை மோசமாக இருந்தது, மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நான் பிரார்த்தனை செய்து எலுமிச்சைப் பழத்தை வெட்டினேன், உடனே மழை நின்று விட்டது. நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், இனி மழை பெய்தாலும் கவலையில்லை. அதனால் முதல்வரின் இரவு ஓய்வு பாதிக்கப்படாது” என்றார்.
பாஜக எம்.பி.யின் இந்தப் பேச்சைக் கேட்டதும், முதல்வர் விஷ்ணுதேவ் சாய் உள்ளிட்ட தலைவர்களால் தங்கள் சிரிப்பை அடக்க முடியவில்லை. இது தொடர்பாக வீடியோ காட்சிப்பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.