மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டெட்) முன்னதாக வினாத்தாள் கசிந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் முக்கிய நபரான பிஜேந்திர குப்தா கடந்த சில மாதங்களாகவே தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் இவர் பிஹாரில் இருப்பதாக போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து மகாராஷ்டிர போலீஸ் தனிப்படை பிஹாருக்குச் சென்று நேற்று அவரைக் கைது செய்துள்ளது.
இவருக்கு நாட்டில் நடந்த வேறு சில வினாத்தாள் கசிவிலும் தொடர்பிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவரை மகாராஷ்டிராவுக்குக் கொண்டு சென்று விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக பிஜேந்திர குப்தாவின் மனைவியையும் போலீஸார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.