புது டெல்லி: அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரும் மனுக்களை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இவ்விவகாரத்தை இன்னும் சில நாட்கள் கழித்து விசாரித்தாலும் "வானம் இடிந்து விழுந்துவிடாது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
வழக்கின் அவசரத் தன்மை குறித்து நீதிமன்றப் பதிவகம் மற்றும் உரிய அதிகாரி ஆகியோர் திருப்தி அடைந்த பிறகு, உரிய நேரத்தில் இந்த மனுக்கள் விசாரணைக்குப் பட்டியலிடப்படலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாகு அடங்கிய அமர்வு கூறியது.
மனுதாரர்களில் ஒருவரான அஜய் குமார் ராய் நேரில் ஆஜராகி, விரைவான விசாரணைக்கு வலியுறுத்தியதுடன், முறைகேடு புகார்கள் மீதான தற்போதைய விசாரணையில் திருப்தியில்லை என தெரிவித்தார். இந்த விவகாரத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் சார்பில் மூத்த கூடுதல் தலைமை வழக்கறிஞரும், மூத்த வழக்கறிஞருமான சரண் தேவ் சிங் தாக்கூர் ஆஜரானார்.
பின்னணி என்ன? - உத்தர பிரதேசத்திலுள்ள அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்குப் பக்தர்கள் அளித்த காணிக்கையில் ரூ.7 கோடிக்கும் அதிகமான பணத்தை அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை அண்மையில் ராஜினாமா செய்தனர். கோயிலுக்கு வந்த நன்கொடை நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குற்றத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்த ராஜினாமாவை அளித்துள்ளனர். இதுதொடர்பாக கோயிலில் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.