புதுடெல்லி: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்த தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் பி.வி நாக ரத்தினா, எம் எம் சுந்தரேஷ், ஏ.அமானுல்லா, ஏ.ஜி. மசி, பி.பி. வர்லே, ஆர். மகாதேவன், ஜோய்மால்யா பக் ஷி ஆகியோரை கொண்ட 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடைபெற்ற 16-வது நாள் விசாரணையின்போது, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, மதத்துக்கும், மதப்பிரிவுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. மதம் சார்ந்த உரிமைகள் விவகாரத்தில் நீதிமன்றங்களின் தலையீடு ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க முடியும் என்று வாதிட்டார்.
மற்றொரு மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி, இந்துத் துவம் வாழ்க்கை முறை என்பதைக் காட்டிலும் சமூக கட்டமைப்பைக் கொண்ட மத தத்துவங்களையும் கொண்டு, மனிதர்களுக்கும், சக்திக்கும் இடையிலான தொடர்பையும், இருப்பின் புரிதலையும், மனித வாழ்க்கையின் அர்த்தங்களையும் தருவதாக உள்ளது என்று வாதிட்டார்.
மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன், ஒரு மதத்தில் வழக்கங்களைத் தொடர செய்வதா என்பதற்கு அத்தியாவசிய நடைமுறை கோட்பாட்டைப் பொருத்தி ஆய்வு செய்ய முடியாது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.