மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வர் சுனேத்ரா பவார் நேற்று தேசியவாத காங்கிரஸின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸின் (என்சிபி) தலைவருமான அஜித் பவார் கடந்த ஜனவரி 28ம் தேதி நேரிட்ட விமான விபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி சுனேத்ரா பவார் கடந்த ஜனவரி 31ம் தேதி மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த சூழலில் தேசியவாத காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் குழுக் கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் சுனேத்ரா கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் முதல்வர் அஜித் பவாரின் மறைவால், பாராமதி சட்டப்பேரவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தொகுதியில் சுனேத்ரா பவார் போட்டியிட உள்ளார்.
அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. துணை முதல்வர் சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்தார். இந்த பதவியை அவர் அண்மையில் ராஜினாமா செய்தார். சுனேத்ராவின் மூத்த மகன் பார்த் பவார், மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவார் என்று என்சிபி செயல் தலைவர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.