புதுடெல்லி: கடந்த 2017-ம் ஆண்டு ஊழல் வழக்கு ஒன்றில் கைதான சுகேஷ் சந்திரசேகர், கான்ஸ்டபிள் மஞ்சீத் என்பவரின் செல்போனைப் பயன்படுத்தி டெல்லி சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரியின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, உச்ச நீதிமன்ற நீதிபதியின் தனிச்செயலாளர் மற்றும் நீதிபதி ‘கே.ஜே’ என ஆள்மாறாட்டம் செய்து உடனடியாக தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு மிரட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி பூனம் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்த நிலையில் அது மோசடியான தொலைபேசி அழைப்பு என அறிந்து அது தொடர்பாக புகார் பதிவு செய்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹர்ஷிதா மிஸ்ரா வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: நீதிபதியை மிரட்டிய சுகேஷின் இந்த நடவடிக்கை, அபத்தமானது. நீதிமன்ற உத்தரவுகள் நீதிமன்ற அறையில்தான் பிறப்பிக்கப்படுமே தவிர, ரகசியத் தொலைபேசி அழைப்புகளில் அல்ல. இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான செல்போன், சிசிடிவி காட்சிகளைச் சேகரிக்கத் தவறிய டெல்லி காவல் துறையின் விசாரணை அலட்சியமானது.
சுகேஷுக்கு செல்போன் கொடுத்த கான்ஸ்டபிள் மஞ்சீத் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்திருக்கலாம். அவர் மீது மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். காவல் துறை விசாரணையில் பல குளறுபடிகள் இருந்தபோதிலும், அரசுத் தரப்பு சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகர் குற்றவாளி என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.