புரி: தமிழக முதல்வராக பதவியேற்கும் தவெக தலைவர் விஜய்க்கு பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் உள்ள கரையோர மணலை பயன்படுத்தி விஜய்யின் மணற் சிற்பத்தை வடிவமைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் - 5, இந்திய கம்யூனிஸ்ட் - 2, மார்க்சிஸ்ட் - 2, விசிக - 2 மற்றும் ஐயுஎம்எல் - 2 ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. விஜய் முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கிறார். இதில் காங்கிரஸ் கட்சி, தவெக கூட்டணி அரசில் பங்கேற்கிறது. மற்ற கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி உள்ளன.
இதையடுத்து அவருக்கு மக்கள் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் இணைந்துள்ளார். முக்கிய தருணங்கள் மற்றும் விழா நாட்களில் தான் பெற்ற கலையான மணற் சிற்பக் கலையை கொண்டு அதை போற்றுவதை சுதர்சன் பட்நாயக் வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் விஜய்யின் சிலையை அவர் வடிவமைத்துள்ளார். அதில் விஜய் சினிமா துறையில் நடிகராக இருந்து தவெக எனும் அரசியல் கட்சியை தொடங்கி, தேர்தலில் வென்று, முதல்வராகி உள்ளதை குறிப்பிடும் வகையிலான விளக்கத்தை சுதர்சன் பட்நாயக் கொடுத்துள்ளார். அதில் ‘வாழ்த்துகள் விஜய் அண்ணா’ என்பதும் இடம்பெற்றுள்ளது. இதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து விஜய்க்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.