ஜெய்ப்பூர்: டெலிகிராம் செயலி வாயிலாக போலி நீட் வினாத்தாள் விற்பனை செய்த மாணவர் ஆகாஷ் சவுத்ரி (19) கைது செய்யப்பட்டார். மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததால் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. நாடு முழுவதும் நாளை நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது.
இந்தச் சூழலில் ராஜஸ்தானின் பில்வாரா பகுதியை சேர்ந்த மாணவர் ஆகாஷ் சவுத்ரி, டெலிகிராம் செயலி வாயிலாக போலி நீட் வினாத்தாள்களை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று அதிகாலை பில்வாராவில் உள்ள ஆகாஷ் சவுத்ரியின் வீட்டுக்கு சென்ற போலீஸார் அவரை கைது செய்தனர். அவரது மொபைல்போன், லேப் டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுனில் கூறியதாவது: மத்திய அரசின் எஸ்-மேக் தளத்தில் “பேப்பர் மாபியா” என்ற டெலிகிராம் செயலி குறித்து புகார்கள் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக இந்த செயலி வாயிலாக வினாத்தாள் விற்பனை நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. விசாரணையில் ஆகாஷ் சவுத்ரி என்பவர் டெலிகிராம் வாயிலாக வினாத்தாள்களை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த மாணவர் விபிஎன் வசதியை பயன்படுத்தி டெலிகிராம் செயலியை தொடர்ந்து பயன்படுத்தி உள்ளார். போலி வினாத்தாள்களை தலா ரூ.4,000 முதல் சில ஆயிரங்கள் வரை விற்பனை செய்திருக்கிறார்.
யுபிஐ மூலம் பணம் பெற்றிருக்கிறார். ஆகாஷ் சவுத்ரி தனிநபராக செயல்பட்டாரா அல்லது அவரது பின்னணியில் மோசடி கும்பல்கள் இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு இன்ஸ்பெக்டர் சுனில் தெரிவித்தார்.