இந்தியா

மம்தா பானர்ஜி சென்ற கார் மீது கல்வீச்சு: முதல்வர் சுவேந்து அரசு மீது குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் கார் மீது நேற்று கல்வீச்சு நடந்தது.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், காஞ்சரபாரா நகரைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் பிர்ஜு கியோட் என்பவர் போலீஸ் காவலில் உயிரிழந்தார். அவரது வீட்டுக்குக் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று சென்றார். அப்போது அவரது காரை வழிமறித்து கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. காலணிகள், சேறு வீசப்பட்டது, கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது: எனது காரை குறி வைத்து செங்கற்கள் வீசப்பட்டன. கார் கண்ணாடி திறந்திருந்தால் எனது மண்டை உடைந்திருக்கும். நான் அங்கேயே உயிரிழந்திருப்பேன். எனது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது போலீஸார் வேடிக்கை பார்த்தனர். தாக்குதல் நடத்திய பாஜக கும்பல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற சம்பவத்தை நான் பார்த்தது கிடையாது.

பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரி ஆட்சியில் சட்டம், ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்திருக்கிறது. திரிணமூல் தொண்டர்கள் மீது திட்டமிட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது. எங்கள் கட்சி தொண்டர் பிர்ஜு கியோட் போலீஸ் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார். போலீஸாரின் தாக்குதலில் அவர் உயிரிழந்திருப்பதாக மனைவி குற்றம் சாட்டுகிறார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT