புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.
இதன் முதல் கட்ட விசாரணையில் திருட்டு உறுதி செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. விசாரணையில் முக்கியமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கிளையின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ராமர் கோயிலில் பெறப்படும் காணிக்கைகள் தொடர்பாக, கடந்த பிப்ரவரி 2024-ல் எஸ்பிஐ மற்றும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. உண்டியலில் இருந்து காணிக்கைகளை எடுப்பது, அவற்றை எண்ணுவது மற்றும் வங்கியில் செலுத்துவது ஆகிய பொறுப்புகள் எஸ்பிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டன.
தொடக்கத்தில், இப்பணிக்காக 10 பேர் மட்டுமே பணியமர்த்தப்பட்டனர். மாதாந்திர காணிக்கை வரவு 14 முதல் 15 கோடி ரூபாயாக உயர்ந்ததால், எஸ்பிஐ ஒரு தனியார் முகமை மூலம் ஊழியர்களின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்தியது. இருப்பினும், அந்த முகமைக்கு ஒப்பந்தம் டெண்டர் மூலம் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அதே சமயம், அந்த முகமையின் பணியாளர்களின் பின்னணி பற்றி காவல் துறை சரி பார்த்ததாகவும் தெரியவில்லை. அவர்களில் பலர் கோயில் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் டின்னு யாதவ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் பணியமர்த்தப்பட்டதாகத் தகவல் உள்ளது. இதனால், கைதான 8ல் 5 பேர் ஒருவொருக்கு ஒருவர் உறவினர்கள். எனவே, இது குறித்து எஸ்ஐடி தீவிரமாக விசாரிக்க உள்ளது.
ராமர் கோயில் வளாகத்தில் சுமார் 850 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் சுமார் 650 பேர் ஒப்பந்த ஊழியர்கள், மீதமுள்ளவர்கள் அறக்கட்டளையால் நேரடியாகப் பணியமர்த்தப்பட்டவர்கள். ஆள்சேர்ப்பு செயல்முறையின் போது பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் புகார்கள் உள்ளன. முதலில், அறக்கட்டளை அதிகாரிகள் தங்கள் உறவினர்களை நியமித்தனர். பின்னர், பணி நியமனம் பெற்றவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் வேலை பெற்றுத் தரத் தொடங்கினர். இதுபோன்ற காரணங்களால், காணிக்கை திருடு போகத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு: இந்நிலையில், ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது கோடை விடுமுறை தொடரும் நிலையில் இம்மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே, கோடை விடுமுறைக்கு பின் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காணிக்கை திருடருக்கு வாதாடினால் ரூ.5 லட்சம் அபராதம்: வழக்கறிஞர் சங்கம் முடிவு- உத்தர பிரதேசத்தின் பைசாபாத் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டில் தொடர்புடைய நபர்கள் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது எனவும், மீறினால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த சர்ச்சையில் சிக்கிய அறக்கட்டளை நிர்வாகிகள் சம்பத் ராய், அனில் மிஸ்ரா மற்றும் கோபால் ராவ் ஆகியோர் அயோத்தியைவிட்டு 3 நாட்களில் வெளியேற வேண்டும் என வழக்கறிஞர் சங்கம் கூறியுள்ளது.
இது குறித்து வழக்கறிஞர் சங்க தலைவர் கலிக பிரசாத் மிஸ்ரா கூறுகையில், ‘‘இந்த மிகப் பெரிய திருட்டு சம்பவம் அறக்கட்டளை நிர்வாகிகள் சம்பத் ராய், கோபால் ராவ் மற்றும் அனில் மிஸ்ராவுக்கு தெரியாமல் நடைபெற்றிருக்க முடியாது. இந்த வழக்கு விசாரணையை கையாள ஒரு குழு அமைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்’’ என்றார்.