ஷியாமா பிரசாத்
புதுடெல்லி: பாரதிய ஜன சங்க நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கடந்த 1951ம் ஆண்டு பாரதிய ஜன சங்கத்தை ஷியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கினார். நாட்டுக்காக தொடர்ந்து சேவையாற்றிய அவர் கடந்த 1953ம் ஆண்டு மே 11ம் தேதி உயிரிழந்தார். இந்த சூழலில் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க தேச கட்டமைப்பாளர்களில் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியும் ஒருவர். அவரது 125-வது பிறந்த நாளில் அவருக்கு நான் தலைவணங்குகிறேன். இந்தியாவின் ஒற்றுமை, கண்ணியம், முன்னேற்றம் ஆகியவற்றுக்காக அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பங்களிப்புகள் பல்வேறு துறைகளிலும் பரவியுள்ளன. சிந்தனையாளராகவும், கல்வியாளராகவும் விளங்கிய அவர் புதுமை, எதிர்காலம் சார்ந்த கற்றலுக்கு ஆதரவாக இருந்தார்.
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு அவர் இன்றளவும் ஊக்க சக்தியாக விளங்குகிறார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பயணத்தில் நாம் முன்னேறிச் செல்லும் நிலையில் அவரது தொலை நோக்குப் பார்வை நமது பாதைக்கு தொடர்ந்து ஒளி விளக்காக திகழ்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், தேசிய, பிராந்திய கட்சிகளின் தலைவர்கள் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தி உள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கொல்கத்தாவில் உள்ள முகர்ஜியின் பூர்வீக வீட்டுக்கு சென்று மரியாதை செலுத்தினார். கொல்கத்தாவின் சுற்றுச்சூழல் பூங்காவில் முகர்ஜிக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கு அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.