புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டிய விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்குக்கு சசி தரூர் எம்.பி. ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடியின் பழைய புகைப்படத்தை பதிவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒழுக்கம், கட்டுப்பாட்டை புகழ்ந்தார். அதோடு காங்கிரஸின் கட்டமைப்புகளை வலுப்படுத்த ராகுல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் 140-வது நிறுவன தினம் டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது திக்விஜய் சிங்கின் அருகே திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அமர்ந்தார். விழா நிறைவடைந்து சசி தரூர் வெளியே வந்தபோது, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சசி தரூர் கூறியதாவது: நானும் திக் விஜய் சிங்கும் மிக நெருங்கிய நண்பர்கள். நாங்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவோம். இன்றைய விழாவிலும் எங்களது நட்பு வெளிப்பட்டது. காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும் என்று திக் விஜய் சிங் கூறியிருக்கிறார். அவர் கூறிய கருத்துகளில் தவறில்லை.
(ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டியது) அவரது கருத்தை ஆதரிக்கிறேன். 140-வது நிறுவன தின விழாவை கொண்டாடி உள்ளோம். இந்த நேரத்தில் கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சசி தரூர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ”ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தது. கடந்த 1885-ம் ஆண்டில் காங்கிரஸின் முதல் மாநாடு நடைபெற்றது. அப்போது முதல் இப்போது வரை நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் உறுதுணையாக செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர், திக் விஜய் சிங்கை கண்டிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எனினும் சசி தரூர், சச்சின் பைலட் உள்ளிட்டோர் திக் விஜய் சிங்கின் கருத்தை ஆதரித்து பேசி வருகின்றனர். சச்சின் பைலட் கூறும்போது, “காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை எடுத்துரைக்க முழு உரிமை இருக்கிறது” என்று தெரிவித்தார்.